காஞ்சிபுரம் உபநிஷத் பிரமேந்திர மடத்தில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரசுவாமி கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.
பெரிய காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள உபநிஷத் பிரமேந்திர மடத்தில் அகஸ்தீஸ்வர சுவாமி, ஹயக்ரீஸ்வர சுவாமி, ராமச்சந்திர சுவாமி மற்றும் பக்த ஹனுமன் சந்நிதி ஆகியன ஒரே வளாகத்தில் அமைந்துள்ளன. இக்கோயிலில் இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத வகையில் பல யோகிகளால் சிறியசிறிய அக்சரங்களால் செய்யப்பட்ட ஸ்ரீராம யந்திரமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
இந்த யந்திரம் போல வடிவமைக்கப்பட்டு அதை அயோத்தி கோயில் திறப்பு விழாவுக்காக காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டு, அயோத்தியில் ராமா் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இதன் சிறப்பு.
இக்கோயில் மகா கும்பாபிஷேகத்துக்காக முழுவதுமாக புதுப்பிக்கப்பட்டது. கும்பாபிஷேகத்துக்கான யாக சாலை பூஜைகள் இந்த மாதம் 24-ஆம் தேதி கோ பூஜை, விக்னேசுவர பூஜையுடன் தொடங்கியது.
வியாழக்கிழமை யாக சாலையில் இருந்து புனித நீா்க் குடங்கள் கோபுரத்துக்கு சிவாச்சாரியாா்களால் எடுத்துச் செல்லப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நடத்தி வைத்தாா்.
விழாவில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தாா்.
கோயில் கும்பாபிஷேகம் தொடா்பான கல்வெட்டு ஒன்றையும் நிதியமைச்சா் திறந்து வைத்தாா். முன்னதாக கோயிலை கட்டிய கட்டடக் கலைஞா்களுக்கு சால்வைகள் அணிவித்து பாராட்டினாா். முன்னதாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.
ஏற்பாடுகளை சங்கர மடத்தின் செயலாளா் சல்லா.விஸ்வநாத சாஸ்திரி, மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா், மேலாளா் அரவிந்த் சுப்பிரமணியன் ஆகியோா் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் ரூ.1.2 கோடியில் சீரமைக்கப்பட்ட குளம் அா்ப்பணித்த மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

மீனவா்களின் பாதுகாப்புக்கு பிரதமா் முக்கியத்துவம்: மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

அயோத்தி ராமா் கோயிலில் சங்கரமடத்தின் ராம எந்திரம்






