குடிமராமத்து பணியும் தோல்வி; குடிநீர் திட்டப் பணிகளும் தோல்வி: தமிழக அரசைக் காய்ச்சி எடுத்த ஸ்டாலின் 

குடிமராமத்து பணியும் தோல்வியடைந்து, குடிநீர் திட்டப் பணிகளும் தோல்வியடைந்து இன்றைக்கு தமிழகம் தண்ணீர் இல்லாத நிலையில் பஞ்சத்தில் தவித்து கொண்டிருக்கின்றது என்று.. 
குடிமராமத்து பணியும் தோல்வி; குடிநீர் திட்டப் பணிகளும் தோல்வி: தமிழக அரசைக் காய்ச்சி எடுத்த ஸ்டாலின் 

சென்னை: குடிமராமத்து பணியும் தோல்வியடைந்து, குடிநீர் திட்டப் பணிகளும் தோல்வியடைந்து இன்றைக்கு தமிழகம் தண்ணீர் இல்லாத நிலையில் பஞ்சத்தில் தவித்து கொண்டிருக்கின்றது என்று சட்டப்பேரவையில் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் நிலவியிருக்கும் தண்ணீர் பிரச்சினை குறித்து, திங்களன்று  சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார். அவர் பேசிய உரையின் விவரம் பின்வருமாறு:

தமிழகத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய குடிநீர் பஞ்சத்தை பொருத்தவரையில் சில செய்திகளை எடுத்துச் சொல்லி, அதற்குரிய உடனடி நடவடிக்கையை துரித நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என்பதற்காக இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை நான் கொடுத்து அதை தாங்கள் இன்றைக்கு எடுத்துக் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆகவே இது குறித்து நான் எடுத்துச் சொல்ல விரும்புவது 12-06-2018 அன்று நிதி அயோக் வெளியிட்டு இருக்கக்கூடிய வாட்டர் காம்போசைட் ரிப்போர்டில் சென்னை உள்ளிட்ட இந்தியாவில் இருக்கக்கூடிய 21 மாநகரங்கள் 2020ல் தண்ணீர் இல்லாத நாளை, Zero Water Day என்ற நிலையை சந்திக்க போகின்றது என்று கடுமையான வகையில் எச்சரிக்கை விடுத்திருக்கின்றது. அவையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற பொழுது 13-02-2019 அன்று நான் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் இந்த பிரச்சினை குறித்து எடுத்துச் சொல்லி, அது குறித்து நான் பேசியது இந்த அவையில் பதிவாகி இருக்கின்றது. சென்னைக்கு குடிநீர் தரக்கூடிய பூண்டி, சோழவரம், ரெட்ஹில்ஸ், செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் வறண்டு கொண்டிருக்கின்றன. நிலத்தடி நீர்மட்டம் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் குறைந்து கொண்டே வந்து கொண்டிருக்கின்றது. எனவே, குடிநீர் பஞ்சத்தைப் போக்கிட இந்த அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று இந்த அவையில் நான் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எடுத்துக்கூறி இருக்கின்றேன்.

66 சதவிகிதம் பருவமழை பொய்த்துவிட்டது என்பது அரசுக்கு முன்கூட்டியே தெரியும். ஆனால் இந்த அரசு நிதி ஆயோக் எச்சரிக்கையையும் பொருட்படுத்தவில்லை, இந்த அவையில் அன்றைக்கு நான் எடுத்துச் சொன்ன கருத்தையும் செவிமடுத்து கேட்கவில்லை என்று தான் நான் கருதுகின்றேன். அதனுடைய விளைவு இப்பொழுது என்ன இருக்கின்றது என்றால், நிதி ஆயோக் 2020ல் தான் சென்னைக்கு குடிநீர் பஞ்சம் என்று எச்சரித்து இருந்தது. ஆனால், இப்பொழுது 2019ஆம் ஆண்டிலேயே சென்னையில் பல குடியிருப்புகளில் தண்ணீர் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கின்றது. 20-06-2019 அன்று மத்திய நீர்வள குழுமம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி பார்த்தீர்கள் என்றால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 6 அணைகளில், 21 சதவிகித நீர் இருப்பு தான் இருக்கின்றது. இதே தேதியில் கடந்த வருடம் பார்த்தீர்கள் என்றால், 45 சதவிகிதம் இருந்தது. எனவே தமிழ்நாடு இப்பொழுது குடிநீர் பஞ்சத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. தமிழகத்தில் தாய்மார்கள் குடங்களோடு ஆங்காங்கு அலைந்து கொண்டிருக்கக்கூடிய கொடுமைகள் நடந்து கொண்டிருக்கின்றது. சென்னை மாநகரத்தில் ஆன்லைன் புக்கிங் செய்யப்பட்ட குடிநீரை 30 நாட்கள் வரை கொடுக்க இயலாமல், சென்னை புறநகர் குடிநீர் வடிகால் வாரியமும் தண்ணீர் நெருக்கடியில் சிக்கி இருக்கின்றது. உங்களுடைய,  அ.தி‌மு.க.வின் ஆட்சியில் கடந்த நிதிநிலை அறிக்கைகளை எல்லாம் நான் எடுத்து படித்துப் பார்த்தேன். அதாவது,

2016-17 முதல் 2019-20 நிதிநிலை அறிக்கையில் இந்த குடிநீர் திட்டங்களைப் பொருத்தவரையில் மெகா குடிநீர் திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்கு சுமார் 23,000 கோடி ரூபாயும், இதே காலகட்டத்தில் குடி மராமத்து பணிகள், நிலத்தடி நீர் செறிவூட்டல், நீர்வள நில மேலாண்மை உள்ளிட்ட பல பணிகளுக்கு 2,711 கோடி ரூபாயும் ஒதுக்கப் பட்டிருக்கின்றது. கடந்த நான்கு வருடத்தில் பார்த்தீர்கள் என்றால் நீர்வளம் மற்றும் பாசன துறைக்கு, 21,309 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த இரு நிதி ஒதுக்கீடுகளையும் ஒட்டு மொத்தமாகக் கூட்டிப் பார்த்தீர்கள் என்றால், 46,000 கோடி ரூபாய் வருகின்றது.

எனவே அ.தி.மு.க ஆட்சியில் 2011 முதல் 2016 வரை 21,988 கோடி ரூபாயும், 2017 முதல் 2019 வரை 15,838 கோடி ரூபாயும், மொத்தம் 37 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெறுவதாக, உள்ளாட்சித் துறை அமைச்சர் கடந்த 16-06-2019 அன்று அவரை பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்திருக்கின்றார். அந்த பேட்டிகள் எல்லாம் செய்திகளில் வந்திருக்கின்றது அதற்கான ஆதாரம் எல்லாம் என்னிடத்தில் இருக்கின்றது. ஆனால் போரூர், இராமநாதபுரம், தூத்துக்குடி, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏற்கனவே நீங்கள் அறிவித்த 620 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கக்கூடிய திட்டம் கிடப்பில் இருக்கின்றது. என்ன நிலையில் இருக்கின்றது என்பதை இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. அதேபோல் புதிய மெகா கூட்டு குடிநீர் திட்டங்கள் எதுவும் நடைபெறுவதாக எங்கள் கண்ணுக்கு புலப்படவில்லை. எனவே, குடிமராமத்து பணியும் தோல்வியடைந்து, குடிநீர் திட்டப் பணிகளும் தோல்வியடைந்து இன்றைக்கு தமிழகம் தண்ணீர் இல்லாத நிலையில் பஞ்சத்தில் தவித்து கொண்டிருக்கின்றது.

ஜோலார்பேட்டையிலிருந்து தண்ணீர் கொண்டுவர போகின்றோம் என்று சொல்கின்றீர்கள். நான் அதை வரவேற்கின்றேன் விமர்சனம் செய்ய விரும்பவில்லை, அதுவும் தேவை தான். லாரிகளில் தண்ணீர் வினியோகம் செய்கின்றீர்கள் அதுவும் இந்த நேரத்தில் தேவைதான். ஆனால், இவைகளெல்லாம் ஒரு தற்காலிக திட்டங்களாக தான் அமைந்திருக்கின்றது. அதற்குப் பதில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க என்ன நடவடிக்கை, என்ன தொலைநோக்கு திட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றது, நீர் மேலாண்மைக்கு தேவையான நடவடிக்கைகள் என்ன எடுக்கப்பட்டிருக்கின்றது. வெள்ள நீரை சேமிப்பது, வீணாக கடலில் சென்று கலந்து கொண்டு இருக்கக்கூடிய நீரை எப்படி சேமிப்பது, கடலோரத்தில் இருக்கக்கூடிய மாவட்டங்களுக்கு தேவையான, கடல் நீரை குடிநீராக்கக்கூடிய திட்டங்களை உருவாக்குவது. சென்னை மாநகரின் நீர் ஆதாரத்தை பெருக்குவது, புதிய ஏரியை உருவாக்குவது போன்ற ஆக்கப்பூர்வமான விவாதங்களை நாம் நடத்த வேண்டும். அதற்காக நான் இந்த அவையின் மூலமாக ஒட்டுமொத்த எல்லா சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பிலும் நான் உரிமையோடு சபாநாயகர் மூலமாக கேட்க விரும்புவது.

இந்த சட்டமன்றத்தை ஒருநாள் சிறப்பு நேர்வாக ஒதுக்கி அனைத்து உறுப்பினர்களுடைய கருத்துக்களையும் கேட்டு விவாதிக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com