நாம் எதிர்க்கட்சியா அல்லது ஆளும் கட்சியா என்று எனக்கு ஆச்சர்யம்: ஸ்டாலின் பேச்சு 

ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் நடத்த வேண்டிய நிகழ்ச்சிகளை நாம் நடத்துவதால், நாம் எதிர்க்கட்சியா அல்லது ஆளும் கட்சியா என்று ஆச்சர்யம் அடைவதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
நாம் எதிர்க்கட்சியா அல்லது ஆளும் கட்சியா என்று எனக்கு ஆச்சர்யம்: ஸ்டாலின் பேச்சு 

சென்னை: ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் நடத்த வேண்டிய நிகழ்ச்சிகளை நாம் நடத்துவதால், நாம் எதிர்க்கட்சியா அல்லது ஆளும் கட்சியா என்று ஆச்சர்யம் அடைவதாக திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், சென்னை சைதை தொகுதியில், திமுக சார்பாக ஆயிரம் இடங்களில் மழை நீர் சேகரிக்கும் தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

ஒரு அருமையான திட்டம் இந்தத் திட்டம் மழைநீரை சேகரித்து, குடிநீர் பிரச்சினையாக இருந்தாலும் தண்ணீர் பிரச்சினையாக இருந்தாலும், அவைகள் எல்லாம் வரக்கூடிய சூழ்நிலைகளில் நம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு இந்த திட்டம் நிச்சயமாக பயன்படப் போகின்றது. நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்ற நேரத்தில், ஒரு ஆச்சரியத்தோடும் அதிசயத்தோடும் பங்கேற்க வந்திருக்கின்றேன். அது என்னவென்று கேட்டால், ஆட்சிப் பொறுப்பில் இருந்து, அரசை நடத்திக் கொண்டிருக்கக்கூடியவர்கள் தான் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். ஆனால், எதிர்க்கட்சியில் இருக்கக்கூடியவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துகிறோம் என்று சொன்னால், நாம் எதிர்க்கட்சியா அல்லது ஆளுகின்ற ஆளும் கட்சியா என்ற அந்த அதிசயமும், ஆச்சரியமும் எனக்கு மட்டுமல்ல இங்கு வந்திருக்கக்கூடிய அனைவருக்கும் நிச்சயம் ஏற்படும் என்று நான் நம்புகின்றேன்.

மரக்கன்றுகளை இந்தப் பகுதியில் நட்டு வைத்து, இதனை ஒரு பசுமைத் தொகுதியாக உருவாக்கிட வேண்டும் என்கின்ற அந்த எண்ணத்தோடு நம்முடைய மா.சுப்ரமணியம் அவர்கள் இந்தத் தொகுதியில் இருக்கக்கூடிய கழக நிர்வாகிகள் ஒத்துழைப்போடு, குறிப்பாக மக்களின் ஆதரவோடும் அதனை சிறப்பாக அவர் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவர் பேசுகின்ற பொழுது கூடச் சொன்னார், அந்த மரங்கள் அனைத்தும் இன்றைக்கு சைதை தொகுதியை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றது என்று. ஒரு திருத்தம், என்னவென்றால் அலங்கரிப்பது மட்டுமல்ல இந்தத் தொகுதியில் இருக்கக்கூடிய மக்களை காப்பாற்றிக் கொண்டு இருக்கின்றது என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது. அதுதான் உண்மை. அதனால்தான் 1 மரத்தை நாம் எடுக்கின்ற நேரத்தில் அந்தப் பகுதியில் அதற்கு பதிலாக 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற, பிரச்சாரத்தை தொடர்ந்து நாம் முழங்கிக் கொண்டு இருக்கின்றோம்.

மழை நீர் பிரச்சினை இன்றைக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் பெறுகின்றது என்பதை சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால், தண்ணீர் பஞ்சம் இன்றைக்கு நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் நாம் அவதிப்படக்கூடிய நிலை, சென்னை மாநகர மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக மக்களின் நிலை இன்றைக்கு குடங்களை தூக்கிக்கொண்டு தாய்மார்கள் அலைந்து கொண்டிருக்கக்கூடிய அந்தக் காட்சிகளைப் பார்க்கின்றோம். மறியல்கள், போராட்டங்கள் போன்றவை செய்யக்கூடிய அனைத்தையும் பார்க்கின்றோம்.  இப்பொழுது கூட தண்ணீர் பஞ்சம் போன்றதொரு இப்படியொரு நிலை வரப்போகிறது என்று ஏறக்குறைய ஐந்தாறு மாதங்களுக்கு முன்பு பல பத்திரிகைகள் கட்டுரைகள் எழுதி இருக்கின்றது. ஆய்வுக்கட்டுரைகளை தீட்டி இருக்கின்றது. சில விஞ்ஞானிகள் இவற்றையெல்லாம் கண்டறிந்து வெளிப்படையாக சொல்லி இருக்கின்றார்கள் அரசையும் எச்சரித்திருக்கிறார்கள்.

இதற்கென்று இருக்கக்கூடிய அதிகாரிகளும் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கின்றார்கள். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இது குறித்து நான் பேசுகின்ற பொழுது சென்னைக்கு குடிநீர் வழங்கும் சுற்றுவட்டாரத்தில் இருக்கக்கூடிய ஏரிகள் அனைத்தும் வற்றிக் கொண்டிருக்கின்றது. தண்ணீரின் அளவு குறைந்து கொண்டிருக்கின்றது என்று ஆதாரத்தோடு செய்திகளை எல்லாம் நான் சட்டமன்றத்தில் பேசி இருக்கின்றேன். ஆனால், அதற்குரிய நடவடிக்கையை இந்த அரசு எடுத்திருந்தால் நிச்சயமாக இந்த நிலை வந்திருக்காது. ஆனால், அதைப் பற்றியெல்லாம் அவர்கள் கவலைப்படவில்லை. அதனால்தான், நாம் ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு நம் அமைப்பின் சார்பிலும், கட்சியின் சார்பிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் தூர் எடுக்காமல், குப்பைகளை கொட்டி வைத்திருக்கக்கூடிய அந்த சூழ்நிலையில் இருக்கும் ஏரிகளை குளங்களைத் தூய்மைப்படுத்தி தூர்வாரி வைப்போம் என்று சொன்னால் மழைக்காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்கக்கூடிய ஒரு சூழ்நிலை வரும் என்ற நிலை அறிந்து அந்தப் பணியை நாம் துவங்கினோம். மிகச் சிறப்பாக அந்த பணிகளை நாம் செய்து முடித்திருக்கின்றோம்.

நேற்றைய தினம் நீங்கள் ஒரு செய்தியை பார்த்திருப்பீர்கள், புதுவை மாநிலத்தில் இருக்கக்கூடிய கிரண் பேடி என்ற ஆளுநர் அந்த மாநிலத்தில் தொடர்ந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். இப்பொழுது தமிழ்நாட்டில் தண்ணீர் பிரச்சினை குறித்து கருத்து சொல்லுகின்ற பொழுது, ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அ.தி.மு.கவை விமர்சிப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசியல் கட்சித் தலைவர்களையும் விமர்சிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு மக்களையும் கேவலப்படுத்தி கொச்சைப்படுத்தி விமர்சித்திருக்கின்றார். நம்முடைய ஆளுநராக இருந்தால் கூட வருத்தப்பட்டிருக்க மாட்டேன். அவர், வேறு மாநிலத்தின் ஆளுநர். உடனடியாக சட்டமன்றத்தில் எழுந்து கேட்டேன் “எங்களை மட்டுமல்ல ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய உங்களையும் சேர்த்து தான் அந்த ஆளுநர் கேவலப்படுத்தி இருக்கின்றார். அரசியல்வாதிகளைப் பற்றி விமர்சித்தால் கூட நான் கவலைப்பட மாட்டேன் ஒட்டுமொத்த தமிழர்களையும் கொச்சைப்படுத்தி பேசி இருக்கின்றார் என்றால் அதனை அனுமதிக்கலாமா’ என்று கேட்டேன். வாய் திறக்கவில்லை, இந்தப் பேச்சை எல்லாம் அவையில் பேசக்கூடாது என்று,  அவைக்குறிப்பிலிருந்து என் பேச்சை நீக்கினார்களே தவிர வேறல்ல. நாடாளுமன்றத்தில் நம்முடைய உறுப்பினர்கள் குரல் எழுப்பி அதற்கு சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், நான் அதற்கு வருத்தப்படுகின்றேன், வேதனைப்படுகின்றேன். ஆளுநரிடத்திலிருந்து மன்னிப்பு என்ற அந்த வார்த்தையை நான் கடிதம் மூலமாக பெற்றிருக்கின்றேன் என்று வரலாறு படைத்திருக்கின்றோமே இதைவிட வேறு என்ன வேண்டும். நம்முடைய மானத்தைக் காப்பாற்றி இருக்கின்றோம்.

அதேபோல் ஹைட்ரோகார்பன் திட்டமாக இருந்தாலும், காவிரி நீர் பிரச்சினையாக இருந்தாலும், அந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கின்றோம். மழை நீரை சேமிக்கின்ற இந்த சிறப்பான பணி, இன்னும் பல வகையில் சிறப்புப் பெற வேண்டும். இது வெற்றி பெற வேண்டும் இந்தப் பகுதியில் இருக்கக்கூடிய மக்களுக்கு நல்ல வகையில் பயன்பட ஒத்துழைப்போடு இருந்து, அதற்கேற்ற வகையில் இந்த இயக்கத்திற்கு என்றைக்கும் நீங்கள் துணை இருக்க வேண்டும் என்று உங்களை அன்போடு, பெருமையோடு கேட்டு வாய்ப்பிற்கு நன்றி சொல்லி என் உரையை நிறைவு செய்கின்றேன். நன்றி வணக்கம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com