சென்னை: நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி (62). இவர், திமுக மத்திய மாவட்ட மகளிரணி அமைப்பாளராக இருந்தார். இவரது கணவர் முருகசங்கரன் (72). இவர்கள் திருநெல்வேலி அரசுப் பொறியியல் கல்லூரி எதிரே மேலப்பாளையம் சாலையில் உள்ள ரோஸ் நகரில் வசித்து வந்தனர். இவர்கள் வீட்டில் மேலப்பாளையம் ஆசிரியர் காலனியை சேர்ந்த மாரியம்மாள் (45) என்பவர் பணிப் பெண்ணாக இருந்தார். கடந்த 23ஆம் தேதி உமாமகேஸ்வரியின் வீட்டுக்குள் மர்ம கும்பல் புகுந்து உமாமகேஸ்வரி, முருகசங்கரன், மாரியம்மாள் ஆகியோரைக் கொன்று, பீரோவிலிருந்த நகை, பணத்தைக் கொள்ளையடித்துவிட்டுத் தப்பியோடியது. குற்றவாளிகளைப் பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்நிலையில், திமுக பெண் பிரமுகரின் மகன் உள்பட 3 பேரை தனிப்படை போலீஸார் பிடித்து ஆயுதப்படை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் விசாரணை நடத்தினர். இதில், இவர்கள் 3 பேரும் கொலையுண்ட உமாமகேஸ்வரியின் வீட்டருகே காரில் சென்று 4 முறை நோட்டமிட்டதாகத் தெரியவந்தது. அவர்களது காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். தேர்தலில் சீட் வாங்கித் தருவது தொடர்பான விவகாரத்தில் கொலை நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தற்போது கொலையாளிகள் பயன்படுத்திய கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் குற்றவாளிகளிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கொலை செய்யப் பயன்படுத்திய ஆயுதங்கள் தாமிரபரணி ஆற்றில் வீசப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் ஆற்றில் ஆயுதங்களைத் தேடும் பணியில் தனிப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டி.ஜி.பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வழக்கின் முக்கியத்துவம் கருதி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி காவல்துறை டிஜிபி உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.