பேராசிரியை நிர்மலா தேவிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம்.
பேராசிரியை நிர்மலா தேவிக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்


மதுரை: மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம்.

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்ற வழக்கில் கடந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலா தேவி, நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் தனி அறையில் விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்குப் பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்,  விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும், விசாரணைக்கு குந்தகம் ஏற்படும் வகையில் ஊடகங்களுக்கோ அல்லது தனி நபர்களுக்கோ பேட்டி வழங்கக் கூடாது என்றும் உயர் நீதிமன்றம் நிர்மலா தேவிக்கு நிபந்தனை விதித்துள்ளது.

பாலியல் பேர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவியை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும், அவரிடம் தனி அறையில் விசாரணை நடைபெறும் எனவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் திங்கள்கிழமை உத்தரவிட்டிருந்தது.

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க பொதுச் செயலர் சுகந்தி தாக்கல் செய்த மனு:
அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியின் உதவிப் பேராசிரியை நிர்மலாதேவி, அதே கல்லூரி மாணவிகள் சிலரை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்த சம்பவத்தில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலருக்கு தொடர்பு உள்ளது. ஆனால், அவர்களின் பெயர்கள் வழக்கில் சேர்க்கப்படவில்லை.

நிர்மலாதேவி யாருக்காக மாணவிகளிடம் அவ்வாறு பேசினார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. முக்கிய பிரமுகர்கள், உயர் அதிகாரிகள் பெயர் பட்டியல் வரும் நிலையில், அவர்கள் யார் என்பது குறித்து விசாரிக்கப்படவில்லை. சிபிசிஐடி காவல்துறையினர் நியாயமாக விசாரிக்காமல், ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். எனவே, நிர்மலாதேவி வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் என். கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. நிர்மலாதேவி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், "சிறையில் உள்ள நிர்மலாதேவியை சந்திக்க முடியவில்லை. அவருக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்க முடியவில்லை. இதனால் ஜாமீன் மனு தாக்கல் செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது' என தெரிவித்திருந்தார்.

இதனைக் கேட்ட நீதிபதிகள், நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்குவதில் அரசுக்கு உள்ள பிரச்சினை என்னவென்று கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர், "நிர்மலாதேவிக்கு ஜாமீன் வழங்குவதில் அரசுக்கு எவ்வித ஆட்சேபணையும் இல்லை. நீதிமன்றம் எந்த முடிவெடுத்தாலும் அரசு ஒத்துழைக்கும்' என தெரிவித்தார்.

 அதையடுத்து சிறையில் உள்ள நிர்மலாதேவியை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு ஆஜர்படுத்த வேண்டும் என காவல்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிர்மலா தேவியிடம், நீதிபதிகளின் தனி அறையில் விசாரணை நடைபெற்று, பிறகு ஜாமீன் வழங்குவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதே வழக்கில் நிர்மலா தேவியுடன் கைது செய்யப்பட்ட முருகன், கருப்பசாமிக்கு ஏற்கனவே ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், இதுவரை 6 முறை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டு, கைதாகி 11 மாதங்களுக்குப் பிறகு இன்று நிர்மலா தேவிக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com