பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் செவ்வாயன்று சிபிஐ சோதனை நடத்துகிறது.
பொள்ளாச்சியில் நூற்றுக்கணக்கான் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.பின்னர் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்புகளின் கோரிக்கையை அடுத்து இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
அதையடுத்து சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்ட் நிஷா பார்த்திபன் தலைமையிலான குழுவினர் வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தினர். அதேசமயம் இந்த வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. இதற்கு சம்மதித்த தமிழக அரசு அதுதொடர்பான அரசாணையை வெளியிட்டது.இதையடுத்து சிபிஐ கடந்த ஏப்ரல் மாதம் 27-ம் தேதி விசாரணையைத் தொடங்கியது.
அதையடுத்து பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிஐ அமைப்பிடம் சிபிசிஐடி ஒப்படைத்துள்ளது.இந்த தகவலை சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வீட்டில் செவ்வாயன்று சிபிஐ சோதனை நடத்துகிறது.
கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று செவ்வாய் மதியம் துவங்கி சோதனைநடத்தி வருகிறது.