பேனர்கள், கட்-அவுட்கள் வேண்டாம்: தொண்டர்களுக்கு கட்சிகளின் தலைமை

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், கட்-அவுட்களை வைக்கக் கூடாது என்று அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
பேனர்கள், கட்-அவுட்கள் வேண்டாம்: தொண்டர்களுக்கு கட்சிகளின் தலைமை


பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், கட்-அவுட்களை வைக்கக் கூடாது என்று அதிமுக, திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
அதிமுக: இது தொடர்பாக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மக்களின் தேவையை உணர்ந்து மக்களுக்காகப் பணியாற்றுவதுதான் அதிமுகவினரின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். இந்தக் கருத்து கட்டளையாகவும், வேண்டுகோளாகவும் பல நேரங்களில் கட்சியினருக்கு நினைவூட்டப்பட்டு வந்திருக்கிறது. இதையே நாங்களும் வேண்டுகோளாக பலமுறை எடுத்துக் கூறியுள்ளோம்.
கட்சி நிகழ்ச்சிகள்: அதிமுகவின் கட்சி நிகழ்ச்சிகளுக்கோ, இல்ல நிகழ்ச்சிகளுக்கோ வரவேற்பு என்ற பெயரிலும், விளம்பரம் என்ற முறையிலும் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைப்பதை அன்புகூர்ந்து நிறுத்த வேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தவொரு செயலிலும் அதிமுகவினர் ஈடுபடவே கூடாது.
ஒருசிலர் ஆர்வம் மிகுதியாலும், விளைவுகளை அறியாமலும், நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகள் தெரியாமலும் செய்யும் சில செயல்களால், மக்கள் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்ற செய்தி வரும் போது நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம்.
எனவே, எந்தச் சூழ்நிலையிலும், எந்தக் காரணத்துக்காகவும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்அவுட்கள், ஃபிளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கட்சியினர் இதனை கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
திமுக: திமுக பொதுக் கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள், கட்-அவுட்கள் வைக்கக் கூடாது என்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களுக்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  திமுக பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் எதிலும் பொதுமக்களுக்குச் சிரமம் கொடுக்கும் வகையிலும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலும் பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று நிர்வாகிகள் அனைவருக்கும் நான் ஏற்கெனவே பல முறை அறிவுறுத்தியிருக்கிறேன்.
பொதுக்கூட்டம் அல்லது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் ஒன்று அல்லது இரண்டு பேனர்கள் விளம்பரத்துக்காக உரிய அனுமதி பெற்று, பாதுகாப்பாக வைக்கலாமே தவிர, சாலை மற்றும் தெரு நெடுகிலும் இருசக்கர வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டிகளுக்கும்,  மக்களுக்கும் பேரிடர் ஏற்படும் வகையில் வைப்பதை என்னால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது. அது அறவே நிறுத்தப்பட வேண்டும்.
எனவே, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர்கள், கட்அவுட்கள், பிளக்ஸ் போர்டுகள்  வைக்கக் கூடாது என்பதை  மீண்டும் அறிவுறுத்த விரும்புகிறேன். இந்த அறிவுரையை யாரேனும் மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நான் பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ, கூட்டமாகவோ இருந்தால் அதில் நான் பங்கேற்க மாட்டேன்.  தலைமைக் கழக, மாவட்டக் கழக, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, வட்டக் கழக நிர்வாகிகள் அனைவரும் எனது இந்த அறிவுரையை  மீறாமல் கடைப்பிடித்து திமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
பாமக: பாமக நிகழ்ச்சிகளில் பதாகைகள், கட்-அவுட்களுக்கு இடமில்லை. அதை தொடர்ந்து கட்சியினர் கடைப்பிடிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர்  ச. ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை: பாமக நிகழ்ச்சிகளில் பதாகைகள், கட் அவுட்களுக்கு  இடம் கிடையாது. தூத்துக்குடியில்  பாமக நிகழ்ச்சிக்காக என்னை வரவேற்று வைக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பதாகைகளை அகற்றிய பிறகுதான் அந்த விழாவில் பங்கேற்றேன். பாமக நிகழ்ச்சிகளுக்கு பதாகைகள், கட்-அவுட்களை வைக்கக் கூடாது என்ற எனது ஆணையை இன்றும், என்றும்  நிர்வாகிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com