சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 25ம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியிருப்பதாவது, வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி அடுத்த 3 நாட்களில் தமிழகம் நோக்கி நகர்வதால், தமிழகம் மற்றும் புதுவையில் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழையும், ஒரு சில இடங்களில் கன மழை முதல் மித கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது.
25ம் தேதி கடலோர மாவட்டம் மற்றும் தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை முதல் மிகக் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை முதல் மிகக் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியடன் கூடிய லேசானது முதல் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை மற்றும் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தலா 11 செ.மீ. மழையும், கிருஷ்ணகிரி மாவட்டம்ட கோச்சம்பள்ளியில் 9 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
மீனவர்கள் வரும் 24, 25 தேதிகளில் குமரி கடல் பகுதி, தென் தமிழகக் கடலோரப் பகுதிகள், மாலத்தீவு கடல் பகுதிகளில் வலிமையான சூறைக்காற்று வீசும் என்பதால் மேற்கண்ட கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.