சென்னை: தென்மேற்குப் பருவ மழை காலத்தில் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய மழை எவ்வளவு? அந்த அளவுக்கு மழை கிடைத்திருக்கிறதா என்பது குறித்து புள்ளி விவரம் சொல்வதைப் பார்க்கலாம்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், மழை நிலவரம் குறித்த புள்ளி விவரங்களை வெளியிட்டார்.
அதன்படி, தமிழகத்தில் வழக்கமாகப் பெய்ய வேண்டிய தென்மேற்குப் பருவ மழை அளவை விட 15% அதிகமாக பெய்திருக்கிறது.
அதிலும் நேற்று தான் அதிகபட்சமாக தமிழகத்தில் மழை பதிவாகியுள்ளது. அதாவது கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் சராசரியாக 21 மி.மீ. (2.1 செ.மீ.) மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்துக்கு இந்த பருவ மழை காலத்தில் பெய்திருக்கும் மழையின் அளவு 36 செ.மீ. ஆகும். ஆனால் வழக்கமாக கிடைக்க வேண்டிய மழை அளவு 31 செ.மீ. இது 15 விழுக்காடு மழை அதிகம்.
நாளை மதுரை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்யும். இன்றும் நாளையும் சில மாவட்டங்களில் மிகக் கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மிகக் கன மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 14 செ.மீ. மழை பதிவானது என்றும் தெரிவித்துள்ளார்.