நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுப்பது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுத தமிழக அரசு முடிவு 

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுப்பது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுத தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நீட் தேர்வு குளறுபடிகள்
நீட் தேர்வு குளறுபடிகள்
Published on
Updated on
1 min read

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுப்பது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுத தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் வெங்கடேசன் மகன் உதித் சூர்யா. இவர் தேனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முதலாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் உதித் சூர்யா, நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்றிருப்பதாக அந்தக் கல்லூரி நிர்வாகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக புகார் வந்தது.

அதன் அடிப்படையில் கல்லூரிப் பேராசிரியர்கள், உதித் சூர்யாவிடம் விசாரணை செய்தனர். இதில் உதித் சூர்யா, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர், அவர் திடீரென தலைமறைவானார்.

இதையடுத்து உதித் சூர்யா, நீட் தேர்வு கூட நுழைவுச் சீட்டை மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் ஆய்வு செய்தனர்.  அப்போது, அதில் ஒட்டப்பட்டிருந்த புகைப்படத்துக்கும், உதித் சூர்யாவுக்கும் தொடர்பு இல்லை என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தேனி மாவட்ட காவல்துறையில் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் இரு பிரிவுகளின் கீழ் உதித் சூர்யா மீதும், அவருக்கு தேர்வு எழுதிய நபர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அந்த வழக்கானது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் அவரைத் தொடர்ந்து தேடி வந்த சிபிசிஐடி போலீசார் புதனன்று  திருப்பதியில் அவரையும் அவரது தந்தையையும் சுற்றி வளைத்தனர். பின்னர் சென்னை கொண்டு வரப்பட்ட அவரிடம் சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதன்முடிவில் இருவர் மீதும் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தை தடுப்பது தொடர்பாக தேசிய தேர்வு முகமைக்கு கடிதம் எழுத தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை தேசிய தேர்வு முகமைதான் முன்னின்று நடத்துகிறது. எனவே தேர்வுப் பதிவு நடைமுறைகளின் போதே மாணவர்களின் பயோமெட்ரிக் சான்றுகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து ஒப்பிட தமிழக அரசு வலியுறுத்தும் என்று தெரிகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com