சின்னத்திரை நடிகர் சங்கம் சார்பில் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி மலேசியாவில் நட்சத்திர கலைவிழா நடத்தப்படவுள்ளது.
இது குறித்து சின்னத்திரை நடிகர் சங்கத்தின் தலைவர் ரவிவர்மன் புதன்கிழமை சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
சின்னத்திரை நடிகர் சங்கம் மறைந்த நடிகர் எஸ்.என்.வசந்த் முயற்சியால் 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இத்தனை ஆண்டு காலம் சங்கம் இயங்கிக் கொண்டிருந்தாலும் சங்கத்திற்கான பெரிய நிதியோ, சொந்த கட்டடமோ இல்லாமல் இருந்தது. அந்தக் குறையைப் போக்கும் வகையில் எங்கள் சங்கத்தின் சார்பில் சின்னத்திரை நடிகர் சங்க நலனுக்காக ஆகஸ்ட் 17-ஆம் தேதி மலேசியாவில் மாபெரும் சின்னத்திரை நட்சத்திரங்களின் கலைவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
மலேசியாவில் ஷா அலாம் -சிலாங்கர் - மெலாவாட்டி அரங்கத்தில் இந்த கலை விழா நடைபெற உள்ளது. சின்னத்திரை நட்சத்திரங்கள் மட்டுமின்றி திரையுலக நட்சத்திரங்களும் கலைத்துறை பிரமுகர்களும் இதில் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த விழாவில் சின்னத்திரை நடிகர், நடிகைகளின் நடனம், நாடகம், நகைச்சுவை உள்ளிட்ட பிரிவுகளில் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன என்றார் ரவிவர்மன்.
பேட்டியின்போது சங்கத்தின் செயலாளர் ஆடுகளம் நரேன், துணைத் தலைவர் மனோபாலா, வெங்கட் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.