தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், தமிழகம், புதுவை, காரைக்காலில் வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்துக்கு டெல்டா மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன்கூடிய லேசான முதல் மிதமான மழையும் மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 30 முதல் 40 கி.மீ., வரை பலத்தகாற்று மற்றும் இடியுடன்கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரையிலும் அவ்வப்போது 60 கிலோமீட்டர் வரையிலும் வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சவெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ்ஸை ஒட்டி இருக்கும்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்ட ராயகோட்டையில் 7 செ.மீ., ஓசூர், பென்னாகரம் உள்ளிட்ட இடங்களில் 6 செ.மீ., மழைப்பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.