புரெவி புயல்: பலியான 7 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம்- முதல்வர்

புரெவி’ புயல், மழை காரணமாக பலியான 7 பேரின் குடும்பங்களுக்கு  தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
புரெவி புயல்: பலியான 7 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- முதல்வர்
புரெவி புயல்: பலியான 7 பேரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்- முதல்வர்

‘புரெவி’ புயல், மழை காரணமாக பலியான 7 பேரின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், ரூ.6 லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், புரெவி புயலின் தாக்கத்தால், கடந்த 3.12.2020 அன்று பெய்த அதீத மிக கனமழை மற்றும் 4.12.2020 அன்று பெய்த மிக கனமழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் எனது தலைமையில் இன்று (5.12.2020) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஏற்கனவே, 18.9.2020 அன்று தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையிலும், 12.10.2020 23.11.2020 மற்றும் 1.12.2020 ஆகிய தினங்களில் எனது தலைமையிலும், 21.10.2020 அன்று மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்கள் தலைமையிலும், விரிவான ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.

கடந்த 23.11.2020 அன்று நடைபெற்ற நிவர் புயல் தொடர்பாக எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில், விரிவாக ஆய்வு செய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிட்டேன். மேலும், 24.11.2020 அன்று எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவரச கால கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்டு, நிவர் புயல் தொடர்பான நிலவரங்களை நேரடியாக அறியது தேவையான அறிவுரைகள் உடனுக்குடன் வழங்கினேன்.

26.11.2020 அன்றே நான் நிவர் புயலால் பாதிப்படைந்த கடலூர் மாவட்டத்தில் கள ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் நேரில் ஆறுதல் தெரிவித்தேன். மேலும், 30.11.2020 அன்று சென்னை பள்ளிக்கரணை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள முட்டுக்காட்டில் நிவர் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கினேன்.

இந்திய வானிலை ஆய்வு மையம், 3.12.2020 அன்று இரவு பாம்பன் - கன்னியாகுமரி அருகில் ‘புரெவி’ புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்யது, உடனடியாக போர்க்கால அடிப்படையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு தீவிரப்படுத்தியது.

இதன் காரணமாக உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. இப்புயலின் காரணமாக, கடலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும், பெய்த கன மழையினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

‘புரெவி’ புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில், கடற்கரையோரங்களில் மற்றும் ஆற்றோரங்களில் வசிக்கும் 36,986 எண்ணிக்கையிலான நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 363 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 

அவர்களுக்குத் தேவையான சூடான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பொதுமக்களுக்கு, நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், குடும்பம் ஒன்றிற்கு 10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ஒரு கிலோ பருப்பும், ஒரு லிட்டர் சமையல் எண்ணெயும் வழங்க நான் உத்தரவிட்டேன். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், வீடு வீடாக சென்று, உணவு பொட்டலங்கள், குடிநீர் மற்றும் குழந்தைகளுக்கு தேவையான பால் பவுடர் ஆகியவற்றை வழங்க  உத்தரவிட்டுள்ளேன். மேலும், தேவைக்கு ஏற்ப, நடமாடும் உணவகங்கள் அமைத்து, சூடான உணவு வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

புயல் காரணமாக உயிர் சேதத்தைத் தடுக்க எனது தலைமையிலான அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் ‘புரெவி’ புயல் மற்றும் கன மழை காரணமாக இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும், ஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், இப்புயல் மற்றும் கன மழை காரணமாக 37 பசு மாடுகள், 4 எருமை மாடுகள், 4 எருதுகள், 28 கன்றுகள் மற்றும் 123 ஆடுகள் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும், எருது ஒன்றுக்கு 25,000 ரூபாயும், கன்று ஒன்றுக்கு 16,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புரெவி புயல் காரணமாக 75 குடிசை வீடுகள் முழுமையாகவும், 1,725 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. மேலும், 8 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 410 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கப்படும்.

புரெவி புயலால் ஏற்பட்ட பயிர் சேதாரத்தை முறையாக கணக்கீடு செய்து, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இது மட்டுமின்றி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டு தொகை பெற்றுத் தரவும் உத்தரவிட்டுள்ளேன். தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்ட கடற்கரையின் அருகில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி நகராமல் அங்கேயே நிலை கொண்டுள்ளது. அது, அடுத்த 12 மணி நேரத்தில் அங்கேயே நிலை கொண்டு மேலும் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் கன மழை மற்றும் மிக கனமழை, இன்றும் நாளையும் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிவர் மற்றும் புரெவி புயல் மற்றும் கன மழையினால் பாதிப்படைந்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, இயல்பு நிலைக்கு கொண்டு வர அமைச்சர்கள், அதிகாரிகள், அனைத்துத் துறை பணியாளர்களும் துரிதமாக பணியாற்ற உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com