தம்மம்பட்டி: சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே கடம்பூரில் காணாமல் போன மாணவரை கெங்கவல்லி போலீசார் மீட்டுள்ளனர்.
கடம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. இவரது மகன் நிஷாந்த்(19) பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டயப்படிப்பான டி.பார்ம் படித்து வருகிறார்.
இந்நிலையில், கரோனா விடுப்பில் வீட்டில் ஜாலியாக இருந்துள்ள நிஷாந்த், டிசம்பர் மாதத்தில் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து நிஷாந்த் கடந்த நவ.29 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியவர், வீட்டிற்கு திரும்பவரவில்லை.
இதனைத் தொடர்ந்து நிஷாந்த்தின் தந்தை,கெங்கவல்லி காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரை அடுத்து காவல் உதவி ஆய்வாளர் முருகேசன் தலைமையில் போலீசார், மாணவரை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், நிஷாந்த் வெள்ளிக்கிழமை காலை திருவண்ணாமலையில் இருப்பதாக போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்று மாணவரை மீட்டு வந்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
மாணவரிடம் போலீசார் விசாரித்ததில் தான் மீண்டும் கல்லூரிக்கு செல்வதற்கு பயந்து வீட்டை வெளியேறியதாக கூறியுள்ளார்.