திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வேல் யாத்திரைக்கான வேலை பாஜக மாநில தலைவர் எல்.முருகன் ஞாயிற்றுக்கிழமை காலை காணிக்கையாக செலுத்தினார்.
பாஜக சாா்பில் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்திய கருப்பர் கூட்டத்திற்கு எதிராக கடந்த நவம்பா் 6-ஆம் தேதி திருத்தணியில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் எல். முருகன் தலைமையில் வேல் யாத்திரை தொடங்கப்பட்டு முருகனின் அறுபடை வீடுகள் மற்றும் முக்கிய கோவில்களை கடந்து வந்தது. இதற்கான நிறைவு விழா (நாளை) திங்கள்கிழமை திருச்செந்தூரில் நடைபெறுகிறது.
முன்னதாக யாத்திரைக்கு பூஜை செய்யப்பட்ட சுமார் 4 அடி ஐம்பொன் வேலினை யாத்திரை நிறைவின் ஒரு பகுதியாக திருச்செந்தூர் முருகன் கோவிலில் செலுத்தும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கோவிலில் மூலவர் மற்றும் சண்முகரை வழிபட்டு கொடிமரத்துக்கு அருகில் உள்ள உண்டியலில் வேலை காணிக்கையாக செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலர்கள் கரூ.நாகராஜன், நரேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர் முரளி, மாவட்ட பொதுச்செயலர் சிவமுருகன் ஆதித்தன், மாவட்ட தலைவர் பால்ராஜ், மகளிரணி மாநில பொதுச் செயலாளர் நெல்லையம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.