ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய மத்திய அரசு அனுமதிக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து சத்தியமங்கலத்தில் இந்திய மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த 35 மருத்துவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆயுர்வேத மருத்துவர்கள் இனி அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற மத்திய அரசு கடந்த நவ மாதம் அறிவிப்பை வெளியிட்டது. ‘இதுவரை அலோபதி மருத்துவர்கள் செய்து வந்த அறுவை சிகிச்சைகளை இனி ஆயுர்வேத மருத்துவர்களும் செய்யலாம்’ என்று கூறப்பட்டுள்ளது.
‘நிதி ஆயோக்’ அமைப்பு, 4 குழுக்களை அமைத்து மருத்துவ கல்வி மற்றும் பொதுமக்களுக்கான சுகாதாரமுறைகள், மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவ பயிற்சி ஆகியவற்றை ‘நவீன மருத்துவம் ஆயுஷ்’ என்று ஒரே கலவை முறைக்குள் 2030-ம் ஆண்டில் கொண்டுவர முயன்றுள்ளது. தேசிய கல்விக் கொள்கையின் மூலமாக ஆயுஷ் மருத்துவத்துறையைப் பயின்ற மருத்துவ மாணவர்கள் அவர்களுடைய விருப்பம் போல் அலோபதி மருத்துவமுறையை பயின்றுகொள்ளலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலமாக மருத்துவமுறைகள் கலப்படம் செய்யப்பட்டு, நம் நாட்டின் சுகாதாரத்துறை, மருத்துவத்துறை முழுவதும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அலோபதி மருத்துவமுறையில் குறைந்தபட்சம் 5½ ஆண்டுகள் இளநிலை எம்.பி.பி.எஸ். படிப்பும், அதைச் சார்ந்த கட்டாய ஓராண்டு மருத்துவ பயிற்சியும் பெற்று முதுநிலைப்படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத்தேர்வு எழுதிய பின்னரே மாணவர்கள் அறுவைசிகிச்சை பயிற்சி பெற அனுமதிக்கப்படுவர்.
ஆனால் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு மூலம் ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கான எந்த ஒரு அடிப்படை பயிற்சியும், படிப்பும் இல்லாமல் அறுவை சிகிச்சை செய்யக்கூடிய மருத்துவர்களாக அறிவிக்கப்படுவார்கள். மேலும் அறுவை சிகிச்சைக்குத் தேவையான மயக்க மருந்துகள் ஆயுர்வேத மருத்துவமுறையில் இதுவரை இல்லை.
இதனை ஆராய்ந்து பார்க்கும்போது நோயாளிகள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யலாம் என்ற அறிவிப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தி சத்தியமங்கலம் பேருந்து நிலையம் முன் மருத்துவ சங்கத்தைச் சேர்ந்த 35 மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.