

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் வன அதிகாரிக்கு சொந்தமான தோட்டத்தில் சுமார் 350 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறித்து வனத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது பந்தபாறை பகுதி. இந்தப் பகுதியில் ஸ்ரீவில்லிபுத்துரை சேர்ந்த கோவை மாவட்டம் கொழுமம்பட்டி வனச்சரகத்தில் வன அலுவலராக பணிபுரியும் ஆரோக்கியசாமி தோட்டம் உள்ளது
இந்நிலையில் இவரது தோட்டத்தில் சந்தன மரம் கட்டைகள் பதுக்கி இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது
இதைத்தொடர்ந்து மாவட்ட வன உதவி அலுவலர் அல்லிராஜ் என்பவர் தலைமையில் ரேஞ்சர் அன்னக்கொடி மற்றும் வனத்துறையினர் சுமார் 15 பேர் மோப்பநாய் சிமி உதவியுடன் அந்தத் தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர்
தோட்டத்தில் உள்ள கட்டடத்தில் சோதனை செய்ததில் சுமார் 350 கிலோ சந்தன மரக்கட்டைகள் இருந்துள்ளது. அங்கு இருந்த சந்தன மரக்கட்டைகள் பல லட்சங்கள் மதிப்பிருக்கும் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து வனத்துறை அதிகாரி ஆரோக்கியசாமியிடம் தொடர் விசாரணை நடத்துகின்றனர்.
வனத்துறை அதிகாரிக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கட்டடத்தில் பல லட்சம் மதிப்பிலான சந்தன மரக்கட்டைகள் கைப்பற்றப்பட்டுள்ளது வனத்துறையினர் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் அந்த சந்தன மரக்கட்டைகளை ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்து பாதுகாப்பான கட்டடத்தில் வைத்து பூட்டி வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.