பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் பதில்

கரோனா தொற்று குறையும்போது பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் பதில்

கரோனா தொற்று குறையும்போது பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதல்வரிடம், பள்ளிகள் திறப்பு அறிவிப்பு எப்போது வெளியாகும்? எனக் கேள்வி எழுப்பப்பட்டது. 
அதற்கு பதிலளித்த முதல்வர், கரோனா வைரஸ் தொற்று குறைகின்றபோது பள்ளிகளைத் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும். மேலும் இது குறித்து மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசாங்கமும் சிந்தித்துப் பார்க்குமல்லவா? ஒவ்வொரு மாநிலத்திலும் எவ்வாறு கரோனா வைரஸ் தாக்கம் உள்ளது. சில மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது. ஆகவே இதனை மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். ஒவ்வொருவருக்கும்
அவர்களுடைய குழந்தை முக்கியம், படிப்பு அப்புறம்தான். 
நீங்கள் சொன்ன கருத்தின் அடிப்படையில்தான் பள்ளியை திறக்கலாம் என்று முடிவு செய்து பள்ளி திறப்பதற்கு முன்பாக பெற்றோர்கள், ஆசிரியர்களின் கருத்துக்களைக் கேட்டபோது அவர்கள் வேண்டாம் என்றார்கள். சில அரசியல் எதிர்க்கட்சித் தலைவர்கள் கரோனா வைரஸ் தொற்று இருக்கும்போது பள்ளியைத் திறந்தால் குழந்தைகளுக்கு தொற்று ஏற்படும் என்று சொன்னார்கள், அதனால் நாங்கள் தள்ளி வைத்தோம். தொற்று குறைந்தவுடன், பள்ளிகள் திறக்கப்படும். இது சாதாரண விஷயமல்ல, உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். மிக கவனமாக, எச்சரிக்கையாக அரசு இதை கையாளும்.
எல்லோருக்கும் உரிமை கொடுக்க வேண்டுமல்லவா? படிப்பவர்களை படிக்கக்கூடாது என்று சொல்வதற்கு ஜனநாயக நாட்டில் யாருக்கும் உரிமையில்லை. விருப்பப்பட்டால் படிக்கலாம். படிப்பு என்பது மிக முக்கியம், உயிர் என்பது அதைவிட முக்கியம், இரண்டையும் பார்க்க வேண்டும். பெற்றோர்களின் எண்ணத்தை அறிந்துதான் பள்ளிகளைத் திறக்க வேண்டும், அதுதான் எங்களுடைய நோக்கம். 
அதனடிப்படையில்தான் பெற்றோர்களின் கருத்துக்களைக் கேட்டோம். பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்தார்கள். ஆகவே, பள்ளியைத் திறக்க வாய்ப்பில்லாமல் நிறுத்தி வைத்துள்ளோம். மீண்டும், கரோனா வைரஸ் தொற்று குறையும்போது பெற்றோர்களின் கருத்து கேட்கப்பட்டு, அனுமதியளித்தால் பள்ளி திறக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com