தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சிறுபுலியூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா: பகல்பத்து, இராப்பத்து உற்சவம் ஆரம்பம்

சிறுபுலியூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, பகல் பத்து, இராப்பத்து உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

News image

 சிறுபுலியூர் ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் பகல் பத்து உற்சவத்தின் முதல் நாள், ஸ்ரீ கிருஷ்ணர் திருக்கோலத்தில் எழுந்தருளிய போது எடுத்த படம்.

Updated On :20 டிசம்பர் 2020, 12:24 pm

DIN

நன்னிலம்: சிறுபுலியூர் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி, பகல் பத்து, இராப்பத்து உற்சவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் கொல்லுமாங்குடி அருகிலுள்ள சிறுபுலியூரில் புகழ்பெற்ற ஸ்ரீதயா நாயகி ஸமேத ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் கோயில் உள்ளது. இத்திருக்கோயில் திருமங்கையாழ்வாரால் மங்கள சாசனம் செய்யப் பெற்றது. புகழ்பெற்ற ஸ்ரீரங்கம் பெருமாளைப்போன்று தெற்கு நோக்கிய சன்னதி கொண்டு சிறப்புற்று விளங்குகிறது.

108 வைணவத் திருப்பதிகளில் பதினொன்றாவதாக விளங்குகிறது. ஆதிசேஷனுக்கும் கருடனுக்கும் ஏற்பட்ட கொடிய பகை தீர, ஆதிசேஷன் பல இடங்களுக்குச் சென்று ஓடி ஒளிந்து திரிந்து இறுதியில் தன்னை காக்க வேண்டி சிறுபுலியூரில் பெருமாளை நோக்கித் தவம் செய்ய, மாசி மாத சுக்லபட்ச ஏகாதசி அன்று, ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள் அபயம் தந்து, ஆதிசேஷனைத் தனக்கு சயனமாக ஏற்றுக் கொண்டு, கன்வ முனிவருக்கும், புலிக்கால் முனிவருக்கும் திவ்விய ஸேவைச் சாதிக்கும் சிறப்புப் பெற்ற ஸ்தலம். 'கருடா சௌக்யமா' என்று ஆதிசேஷன் கேட்க அவரவர் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் செளக்யமே' என்று சொல்லப்பட்ட ஸ்தலம். இந்த ஸ்தலத்தில் பூமிக்கு கீழ் கருடன் ஸந்நிதியும் உயர்ந்த இடத்தில் ஆதிசேஷனுக்கு ஸன்னதியும் உள்ளது சிறப்பு.

இவ்வாறு சிறப்பு பெற்ற இக்கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் புகழ்பெற்ற வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு விழாவினையொட்டி பகல் பத்து, இராப்பத்து உற்சவம் ஞாயிற்றுக்கிழமைத் துவங்கியது.

ஞாயிற்றுக்கிழமை, பகல்பத்து முதல் திருநாளையொட்டி காலை ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள், ஸ்ரீகிருஷ்ணர் திருக்கோலத்தில் எழுந்தருளி, பெரியாழ்வார் திருமந்திர நாலாயிர திவ்ய பிரபந்த ஸேவை நடைபெற்றது. பக்தர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் சுவாமியைத் தரிசித்து வழிபட்டனர். பகல்பத்து இரண்டாவது நாள் திருவிழாவான திங்கட்கிழமை ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாள், ஸ்ரீராமர் திருக்கோலத்திலும், மூன்றாம் திருநாளான செவ்வாய்க்கிழமை ஸ்ரீகாளிங்க நர்த்தனத்திலும், புதன்கிழமை ஏகாந்த ஸேவையும் நடைபெறும்.

வியாழக்கிழமை காலையில் திருமங்கையாழ்வார் திருவடி தொழலும், மாலை மோகினி திருக்கோலத்தில் கோயிலில் உள்புறப்பாடும் நடைபெறும். டிசம்பர் 25 ஆம் தேதி இராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ஸ்ரீகிருபாசமுத்திர பெருமாளுக்குத் தங்க முலாம் பூசிய கவசஸேவை நடைபெற்று, தங்கத்தோளுக்கினியானில் எழுந்தருளி, அதிகாலை பரமபத வாசல் திறப்பு நடைபெறும்.

அன்றிரவு ஆஸ்தான புறப்பாடும், இராப்பத்து உற்சவத்தின் இரண்டாம் திருநாளான சனிக்கிழமை நம்பெருமாள் திருக்கோலத்திலும், ஞாயிற்றுக்கிழமை திருவேங்கடமுடையான் திருக்கோலத்திலும், திங்கட்கிழமை திருநாராயணன் திருக்கோலத்திலும், செவ்வாய்க்கிழமைக் கோபாலன் திருக்கோலத்திலும் உள்புறப்பாடு நடைபெறும்.

டிசம்பர் 30ஆம் தேதி புதன்கிழமை இராப்பத்து உற்சவத்தின் ஆறாம் திருநாளில், நம்மாழ்வார் திருவடி தொழல் நடைபெற்று உள்புறப்பாடு நடைபெறும்.  இராப்பத்து உற்சவத்தின் இறுதி நாளான ஏழாம் நாள் வியாழன் இரவு இயற்பா சாற்றுமுறை நடைபெறும். சிறுபுலியூர் ஸ்ரீ கிருபாசமுத்திர பெருமாள் கோயில், மார்கழி மாத சிறப்புப் பெற்ற வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு விழாவின் பகல் பத்து, இராப்பத்து உற்சவ நிகழ்ச்சிகளை, கோயில் தக்கார் ப.மாதவன்,செயல் அலுவலர் மா.இராமநாதன், மேலாளர் வள்ளிகந்தன், பட்டாச்சாரியார் ஸ்ரீகாந்தன் மற்றும் திருக்கோயில் பணியாளர்களும் கிராம வாசிகளும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.