சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா கொடியேற்றம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா கொடியேற்றம்
Published on
Updated on
1 min read

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து திங்கள்கிழமை காலை 6.40 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் ஏ.ர.சர்வேஸ்வர தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றுத் தரிசித்தனர். தொடர்ந்து 10 நாள்கள் பஞ்சமூர்த்தி வீதிஉலா உற்சவம் நடைபெறுகிறது.

டிச.29-ம் தேதி செவ்வாய்க்கிழமை தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. டிச.30-ம் தேதி புதன்கிழமை  அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் மார்கழி ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 

டிச.31-ம் தேதி வியாழக்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. உற்சவ ஏற்பாடுகளைக் கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் ஜி.எஸ்.கணபதி தீட்சிதர், துணைச் செயலாளர் சி.நடராஜ குஞ்சிதபாத தீட்சிதர் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com