காஞ்சிபுரத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான கோவில் நிலம் அறநிலையத் துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
பஞ்சபூத ஸ்தலங்களில் நிலத்துக்கு உரியதாக இருந்து வருவது காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சுவாமி திருக்கோவில். இத்திருக்கோவிலுக்கு சென்னை, செங்கல்பட்டு ,காஞ்சிபுரம் உள்பட பல்வேறு இடங்களில் கோடிக்கணக்கான சொத்துக்கள் உள்ளன.
காஞ்சிபுரத்தில் நகரின் மையப்பகுதியில், கீரை மண்டபம் அருகில், ஆலடி பிள்ளையார் கோவில் தெருவில் இத்திருக்கோவிலுக்கு சொந்தமான 76 சென்ட் காலி மனை இடம் இருந்து வந்தது. வெங்கடகிரிராஜா தோட்டம் என்ற அந்த இடத்தை அதே ஆலடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த கே.பி மணி மற்றும் சுரேஷ் என்ற இருவரும் பல ஆண்டுகளாக ஆக்கிரமித்திருந்தனர். இதுதொடர்பாக கோவில் நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட சொத்து ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமானது என்றும் அதை உடனடியாக நீக்குமாறும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெயா தலைமையில் ஏகாம்பரநாதர் கோவில் செயல் அலுவலர் நாகராஜன் முன்னிலையில் கோவில் செயல் அலுவலர்கள் குமரன் வெள்ளைச்சாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சனிக்கிழமை சென்று அந்த இடத்தை பூட்டி சீல் வைத்து சுவாதீனம் பெறப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.
இந்த சொத்தின் மதிப்பு ரூ.10 கோடி எனவும் ஏகாம்பர நாத சுவாமி கோவில் சொத்துக்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கோவில் செயல் அலுவலர் ந.தியாகராஜன் தெரிவித்தார்.