திருச்சி: திருச்சி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு புதன்கிழமை சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி திருக்கோவில், உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோவில், நாகநாதசுவாமி கோவில் உள்ளிட்ட சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி இரவு வரை சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன. பால், தயிர், சந்தனம், விபூதி, மஞ்சள் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை காலை நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. மேலரண்சாலையில் உள்ள சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் உற்சவம் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.