திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில், பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூர் தியாகராஜர் கோயில், நாயன்மார்களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்களில் 87ஆவது சிவத்தலமான இது, சப்தவிடங்க தலங்களில் தலைமையானதாகும்.
திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் திருவாதிரை திருவிழாவையொட்டி பாததரிசனம் அருளும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். தியாகராஜர் கோயிலின் அர்த்தமண்டபத்தில் சிம்மாசனத்தில் அமர்ந்தபடி தியாகராஜர் காட்சியளிக்கிறார். ஆனால், இத்திருமேனி மூலத்தானத்தில் இடம் பெறவில்லை. அங்கு, அவரின் திருமுகத்தையும், அருகே அமர்ந்துள்ள அருள்நாயகியின் திருமுகத்தையும் மட்டுமே காணமுடியும். மற்ற அங்கங்கள் அனைத்தும் மூடப்பட்டு, ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அபிஷேகத்தின்போது கரத்தின் ஒரு பகுதியையும், மார்கழித் திருவாதிரையில் இடது பாதத்தையும், பங்குனி உத்திரத்தில் வலது பாதத்தையும் தரிசிக்க முடியும்.
அதன்படி, தியாகேசப் பெருமான், பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி புதன்கிழமை காலை முதல் நடைபெற்று வருகிறது. பாத தரிசனம் நிகழ்ச்சியைக் காண, அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் வர வேண்டும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன், முன்பதிவு செய்து கொள்ள இணையதளத்திலும் வசதி செய்யப்பட்டிருந்தது. அதன்படி, திரளான பக்தர்கள் வரிசையாக நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இதன்பின்னர், தியாகராஜர் இரவு 7 மணிக்கு ராஜநாராயண மண்டபத்திலிருந்து யதாஸ்தானம் எழுந்தருளுகிறார்.
முன்னதாக, திங்கள்கிழமை இரவு யதாஸ்தானத்திலிருந்து ராஜாநாராயண மண்டபத்துக்கு தியாகராஜர் வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு அவருக்கு முசுகுந்த சகஸ்ரநாம அர்ச்சனையும், இரவு 10 மணியளவில் திருவாதிரை மகா அபிஷேகமும் நடைபெற்றது.