/

ராமேசுவரம் துறைமுகத்தில் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தம்

ராமேசுவரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்தில் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் புதன்கிழமை நிறுத்தி வைத்துள்ளனர். 

News image
ராமேசுவரம் துறைமுகத்தில் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தம்
Updated On :27 ஜனவரி 2024, 4:52 pm

DIN

ராமேசுவரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்தில் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் புதன்கிழமை நிறுத்தி வைத்துள்ளனர். 

ராமநாதபுரம் மாவட்டம், நீண்ட கடற்கரையைக் கொண்ட பகுதி. ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, சோளியகுடி, ஏர்வாடி, கீழக்கரை உள்ளிட்ட துறைமுகங்களில் 1700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் உள்ளது. நாள்தோறும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். இங்குப் பிடிக்கப்படும் இறால் மீன், நண்டு, கனவாய் மற்றும் உள்ளூர் தேவையைப் பூர்த்தி செய்வதுடன் வெளி மாவட்டங்களுக்குச் செல்லுகிறது. இதில் உயர் ரக இறால் மீன், சிங்கி, கனவாய் உள்ளிட்ட மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இந்நிலையில், கரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் மீன்பிடி தடைகாலம் 80 நாட்களுக்கு மேலாக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை, கடந்த மாதம் 13 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றனர். அப்போதே பிடித்து வந்த இறால் மீனுக்கு கரோனா நோய் பரவலைக் காரணம் காட்டி விலை குறைந்து எடுத்தனர். அதிகளவில் இறால் மீன் கிடைத்ததால் தொடர்ந்து மீன்பிடிக்கச் சென்றனர். இந்நிலையில், படகு ஒன்றுக்கு 400 லிட்டர் முதல் 600 லிட்டர் வரை டீசல் தேவைப்படுகிறது. 

இதில் மாநில அரசு மாதந்தோறும் விசைப்படகுகளுக்கு மானிய டீசல் 1800 மற்றும் நாட்டுப்படகுகளுக்கு 300 லிட்டர் மானிய விலையில் வழங்கப்படுகிறது. ஆனால் கடந்த 15 நாள்களாக தொடர்ந்து டீசல் விலை ஏற்றம் காரணமாக மீனவர்களுக்கு கூடுதலாக 6 ஆயிரம் செலவு ஆகிறது. டீசல் விலை உயர்வு, இறால் மீனுக்கு உரிய நிலை இல்லாதது காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றால் பல ஆயிரம் இழப்புகள் ஏற்படுகிறது. இதனால் ராமேசுவரத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை, துறைமுகத்தில் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

பரபரப்புடன் காணப்படும் துறைமுகம் வெறிச்சோடி காணப்படுகிறது. மீனவர்களை வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மத்திய அரசு சாலைவரியை ரத்து செய்து மீனவர்கள் டீசல் வழங்கிட வேண்டும். மாநில அரசு மானிய டீசல் வழங்குவதை உயர்த்தி வழங்கிட வேண்டும் என மீனவ சங்க நிர்வாகிகள் ஜேசுராஜன் மற்றும் தேவதாஸ் புதன்கிழமை தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.