இலங்கையில் தவித்த 713 இந்தியா்கள் கடற்படைப் கப்பல் மூலமாக மீட்கப்பட்டு தூத்துக்குடி வந்தடைந்தனா்.
கரோனா வைரஸ் நோய் பரவி வந்ததையடுத்து, ஊரடங்கு அமலில் உள்ளதால் வெளிநாடுகளில் சிக்கியவர்கள் நாடு திரும்ப முடியவில்லை. இவர்கள் நாடு திரும்ப உதவுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் இலங்கையில் சிக்கிக்கொண்ட இந்தியர்களை ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பல் மூலம் இந்தியா அழைத்து வர மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்தது.
இதன்படி கொழும்பு துறைமுகத்தில் இருந்து 713 இந்தியர்களுடன் ஐ.என்.எஸ் ஜலஸ்வா கப்பல் நேற்று புறப்பட்டது. இந்த கப்பல் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு இன்று காலை 9.30 மணியளவில் வந்தடைந்தது. கப்பலில் தமிழகத்தை சேர்ந்த 699 பேரும் வெளி மாநிலத்தை சேர்ந்த 14 பேரும் பயணம் செய்தனர்.
தூத்துக்குடி துறைமுகத்தில் அவர்களுக்கு உரிய பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் அனைவரும் அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஏற்கெனவே இந்த கப்பல் மாலத்தீவில் இருந்து இந்தியா்களை இந்தியாவுக்கு அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.