
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள், 15.06.2020 முதல் 25.06.2020 வரை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அதேபோன்று 26.03.2020 அன்று நடைபெற இருந்த மேல்நிலை முதலாம் ஆண்டு தேர்வு 16.06.2020 அன்றும், 24.03.2020 அன்று நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு கரோனா வைரஸ் தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கை காரணமாக எழுதாத தேர்வர்களுக்கு மட்டும் 18.06.2020 அன்றும் நடைபெறவுள்ளன.
இதில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. சிறப்பு பேருந்துகளில் ஆசிரியர்களும் பயணிக்கலாம் என்றும் மாணவர்கள் ஹால் டிக்கெட், அடையாள அட்டை ஆகியவற்றை நடத்துனரிடம் காண்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 50% பேருந்துகள் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.