பென்னாகரம் பகுதிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தினசரி வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில், பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
பென்னாகரம் அருகே மஞ்ச நாயகன் அள்ளி ஊராட்சியில் சுமார் 30க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். மஞ்சநாயகன அள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏரிகளை நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டு வருகிறது. இப்பணியில் நாளொன்றிற்கு 3 மாற்றுத்திறனாளிகள் வீதம் பணி வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் தொற்று காரணமாக, மாற்றுத்திறனாளிகள் வேலையின்றி வறுமையில் உள்ள நிலையில், நாளொன்றுக்கு 3 நபர்களுக்கு மட்டும் பணி வழங்குவதைக் கண்டித்தும் 100 நாள் வேலைத் திட்டத்தில் மஞ்சநாயக்கன அள்ளி பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தினசரி பணி வழங்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி வழங்கப்படும் என உறுதியளிக்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தனர். இதில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல சங்க மாவட்டச் செயலாளர் கரூரான், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ரஜினி, மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கம் மாவட்ட இணைச்செயலாளர் இடும்பன் மற்றும் வட்ட செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.