

சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே பொக்லைன் இயந்திர வாகன உரிமையாளர், கள்ளக்காதல் விவகாரத்தில், கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இவரது பிரேதத்தைக் கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அடுத்த வெள்ளாளப்பட்டி கிராமம், ஆலமரத்துப் பேருந்து நிறுத்தம் பகுதியைச் சேர்ந்தவர் பெரியண்ணன் மகன் சதாசிவம் வயது (40). இவருக்கு என்ற பரிமளா (35) என்ற மனைவியும், தனசீலன் (13), அபிரஞ்சிதன்(10) என்ற இரு மகன்களும் உள்ளனர்.
பொக்லைன் இயந்திரம் மற்றும் டிராக்டர் வாகனங்கள் உரிமையாளரான சதாசிவம், ஞாயிற்றுக்கிழமை இரவிலிருந்து மாயமானார். இந்நிலையில் திங்கள்கிழமை காலை, அதே பகுதியில் நீரோடை பாலத்திற்கு, கைகள் மற்றும் கால்கள் இரும்பு கம்பியால் கட்டப்பட்டு, உடல் முழுதும் காயங்களுடன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) வாழப்பாடி சுப்பிரமணியம் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று கொலையுண்ட சதாசிவத்தின் பிரேதத்தைக் கைப்பற்றி, உடற்கூறு பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சதாசிவத்திற்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு பெண்களுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், இதில் ஆத்திரமடைந்து சதாசிவத்தை செல்லிடப்பேசியில் தகவல் தெரிவித்து வரவழைத்து, இவரது கைகள் மற்றும் கால்களை இரும்பு கம்பியால் கட்டி, கொடூரமாகத் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.
கொடூரமாகத் தாக்கி கொலை செய்த, கள்ளக்காதலிகள் மற்றும் அவரது குடும்பத்தினரைப் பிடித்து, ஏத்தாப்பூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.