பவானி நகரப் பகுதிகளில் சட்டவிரோதமாக நடைபெறும் மதுபான விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, பவானி காவல் துணை கண்காணிப்பாளர் சேகர், பவானி காவல் ஆய்வாளர் தேவேந்திரன் ஆகியோரிடம், கட்சியின் நகரச் செயலாளர் ப.மா.பாலமுருகன் தலைமையில் புதன்கிழமை அளிக்கப்பட்ட மனு விவரம்:
பவானி நகரத்தில் உள்ள 27 வார்டுகளிலும் சட்ட விரோதமாக டாஸ்மாக் மதுபானம் தனி நபர்களால் விற்கப்பட்டு வருகிறது. இதனால், குடிப்பழக்கம் அதிகமாகி வருகிறது. மேலும், சட்டவிரோதமாக விற்கப்படும் மதுவில் கலப்படம் இருப்பதாகப் பரவலாக புகார்கள் எழுந்துள்ளது.
இதன் காரணமாகவும், குடிப்பழக்கத்தின் காரணமாகவும் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, காவல் துறை நடவடிக்கை எடுத்து சட்டவிரோத மது விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.சந்திரசேகர், நகரத் துணை செயலாளர்கள் பி.ஆர்.செல்வராஜ், பி.ஆர்.ஆறுமுகம் உள்ளிட்டோர் உடன் சென்றிருந்தனர்.