புது தில்லி: இந்தியாவில் கரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 5,66,840-ஆக உயர்ந்துள்ளது. கரோனா பாதிப்பில் இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்த தில்லியை தமிழகம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக 4,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, தமிழகத்தில் கரோனா பாதிப்பு 86 ஆயிரமாக உயர்ந்தது. தில்லியில் கரோனா பாதிப்பு 85 ஆயிரமாக இருக்கிறது. எனவே பாதிப்பில் இதுவரை இரண்டாவது இடத்தில் இருந்து வந்த தில்லியை தமிழகம் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
கர்நாடகமும், 1,100 புதிய கரோனா நோயாளிகளுடன் ஹரியாணா மற்றும் ஆந்திர மாநிலங்களை கரோனா பாதிப்பு பட்டியலில் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.
மகாராஷ்டிரத்தில் ஒரே நாளில் 5,200 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு 1 லட்சத்து 69 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தில்லியில் 2,084 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. எனவே, வைரஸ் தொற்று அதிகம் இருக்கும் இடங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கரோனாவால் கடந்த 24 மணி நேரத்தில் 18,552 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 415 பேர் பலியாகியுள்ளனர். இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,48,318-லிருந்து 5,66,840-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் பலியானோரின் எண்ணிக்கை 16,475-லிருந்து 16,890-ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3,21,723-லிருந்து 3,34,822-ஆக உயர்ந்துள்ளது.