சவாலான தொகுதிகளை நேரடியாக எதிர்கொள்ளும் திமுக! அதிமுக?
சவாலான தொகுதிகளில் களம் கண்டு நேருக்கு நேர் திமுக சந்திக்கிறது என்றும் அதுபோன்ற தொகுதிகளை கூட்டணிக்கு அதிமுக விட்டுக்கொடுத்ததாகவும் தரவுகள் கூறுகின்றன.

உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக)

உதய சூரியன் (திமுக), இரட்டை இலை (அதிமுக)
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுடன் திமுகவும் - அதிமுகவும் களம் கண்டுவரும் நிலையில், சில தொகுதிகளில் போட்டி கடுமையாக இருந்தாலும், அதனை எதிர்கொள்வதில் யார் அசத்தினார்கள் என்று அலசப்பட்டுள்ளது.
ஆறு முனைப் போட்டி, ஏழு முனைப் போட்டி என்று தமிழகத் தேர்தலைப் பற்றி கூறி வந்தாலும், தமிழகத்தின் மிக முக்கிய அரசியல் கட்சிகளான திமுக - அதிமுக இரண்டும் எப்போதும் தனி கவனம் பெறுவது இந்த முறையும் நீடிக்கிறது.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக தனித்துப் போட்டியிடுவது 167 இடங்கள். கடந்த தேர்தலைக் காட்டிலும் 12 இடங்கள் குறைவு. திமுகவோ 164 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. கடந்த தேர்தலை விடவும் 9 இடங்கள் குறைவு. இதனால், அதிமுக - திமுக வேட்பாளர்கள் நேரடியாக களம் காண்பதும் கடந்த தேர்தலில் 156 ஆக இருந்தது இந்த தேர்தலில் 135 ஆகக் குறைந்திருக்கிறது. கூட்டணிக் கட்சிகளைத் தவிர்த்துப் பார்த்தால், கொளத்தூர், எடப்பாடி என 121 தொகுதிகளில்தான் இரண்டு கட்சிகளும் மோதுகின்றன.
அதாவது, கடுமையான போட்டியிருக்கும் தொகுதிகள், தங்களுக்கு சாதகமான தொகுதிகள், வெற்றி பெறும் வாய்ப்புள்ள தொகுதிகளை எவ்வாறு இரு கட்சிகளும் கையாண்டிருக்கின்றன என்பதே களத்தின் அடிப்படையாகப் பார்க்கப்படுகிறது.
அதாவது, திமுக எங்கெல்லாம் பலம் குறைந்து இருக்கிறதோ, எங்கு கடும் போட்டி இருக்கிறதோ அந்த தொகுதிகளை திமுக தன் பக்கம் வைத்துக்கொண்டுள்ளது. ஆனால், அதிமுகவோ, வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ள தொகுதிகளை தன் பக்கம் வைத்துக்கொண்டு போட்டி அதிகம் உள்ள தொகுதிகளைத்தான் கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியிருப்பதாக கருத்து நிலவுகிறது.
இதற்கு ஒரே ஒரு உதாரணம், 2021 தேர்தலில் அதிமுக வென்ற 66 தொகுதிகளில் இந்த முறை 94 சதவிகிதம் அதாவது 62 தொகுதிகளை தன் பக்கமே வைத்துக்கொண்டது. திமுகவோ வென்ற 133 தொகுதிகளில் 89 சதவிகிதம்தான் அதாவது 119 தொகுதிகளைத்தான் தன் பக்கம் தக்க வைத்துக் கொண்டுள்ளது. 14 தொகுதிகளை கூட்டணிகளுக்கு கொடுத்திருக்கிறது.
அதுபோலவே, கூட்டணிக் கட்சிகளும் தாங்கள் வென்ற 26 தொகுதிகளில் 24 தொகுதிகளை திரும்பப் பெற்றுள்ளன.
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த கடந்த முறை வென்ற 9 தொகுதிகளில் கூட்டணிக் கட்சிகள் இந்த முறை 5 தொகுதிகள்தான் பெற்றுள்ளன. அதிமுக கூட்டணி வென்ற மற்ற தொகுதிகளை அதிமுகவை வைத்துக்கொண்டுள்ளது. டெல்டா பகுதிகளில் திமுக வென்ற 3 தொகுதிகளையும் இந்த முறை கூட்டணிக்கு விட்டுக்கொடுத்து, தங்களது பலத்தை திமுக நிரூபிக்கவே முயன்றிருக்கிறது.
இது மட்டுமல்ல, வேட்பாளர்கள் அறிவிப்பு உள்ளிட்ட பல விவகாரங்களிலும் அதிமுக சற்று பாதுகாப்பான ஆட்டத்தையே ஆடிவருவதாகக் கூறுகிறார்கள்.
அதிமுகவின் முதல் வேட்பாளர் பட்டியலில் 23 பேர் முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய வேட்பாளர்களாக இருந்தனர். இதில் எடப்பாடி பழனிசாமி, வேலுமணி, விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் உள்ளிட்ட 19 பேரையும் எதிர்த்து திமுகவே களம்காண்கிறது. ஆனால், திமுக அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளை அதிமுக தன்னுடைய கூட்டணிக்கு ஒதுக்கியிருக்கிறது.
பாஜகவுக்கு ஒதுக்கியிருக்கும் 27 தொகுதிகளில் குறைந்தது 7 தொகுதிகள் திமுக அமைச்சர்கள் அல்லது கட்சியின் மூத்த தலைவர்கள் போட்டியிடும் வலுவான தொகுதிகளாக இருந்தன. அமமுகவுக்கு ஒதுக்கியிருக்கும் 11 தொகுதிகளில் 3 தொகுதிகள் திமுக வேட்பாளர்கள் பலம் வாய்ந்தவர்களாக இருக்கின்றன. அதில் மா. சுப்பிரமணியன் போட்டியிடும் சைதாப்பேட்டை, டிஆர்பி ராஜா போட்டியிடும் மன்னார்குடி, கே.என். நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு ஆகியவை அடங்கும்.
பாஜக-வின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு, அதிமுக ஒதுக்கிய ஐந்து தொகுதிகளில் திமுக அமைச்சர்கள் போட்டியிடும் 3 தொகுதிகள் அடக்கம். எனவே, கடும் போட்டியான, சவாலாக இருக்கும் தொகுதிகளை கூட்டணிக்கு ஒதுக்கிவிட்டு, தோல்வியடைந்தால், தோல்விக் கணக்கை அவர்கள் தலையில் கட்டிவிடலாம் என்று எண்ணாமல், அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிக் கணக்கைக் கூட்ட வேண்டும் என்ற எண்ணத்தோடு, திமுக தேர்தல் களத்துக்கு வந்திருப்பதாகவே இந்த தரவுகள் கூறுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...