சி.ஏ.ஏ.வுக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்துக: டிஜிபிக்கு நீதிமன்றம் உத்தரவு
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை அப்புறப்படுத்த தமிழக டிஜிபிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், திருப்பூரில் கடந்த இரு தினங்களாக குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று வழக்கறிஞர் கோபிநாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் சுந்தரர், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. காவல்துறை அனுமதியின்றி போராட்டம் நடைபெற்று வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது, சிறுவர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று புகார் தெரிவிக்கப்பட்டது.
விசாரணை இறுதியில், குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை உடனடியாக அப்புறப்படுத்த டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.