சென்னையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை சனிக்கிழமை மாலை நிலவரப்படி 10 ஆயிரத்தை நெருங்குகிறது.
தமிழகத்தில் மாவட்டவாரியாக கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்டவை அடங்கிய செய்திக் குறிப்பை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதித்தோரில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 624 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னையில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 9,989 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 37 பேருக்கும், வெளி நாடுகளில் இருந்து வந்த 12 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னையில் இன்று புதிதாக 624 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கரோனா பாதித்து பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒட்டுமொத்த பாதிப்பில் சென்னை மாவட்டத்தில் மட்டும் 9,989 பேருக்கும், பிற மாவட்டங்களில் ஒட்டுமொத்தமாக 5,523 பேருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.