தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த 8 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பினர்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கரோனா பாதிக்கப்பட்டு 113 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் கோவில்பட்டியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் குழந்தைகள் உள்ளிட்ட 8 பேர் குணமடைந்தனர். அவர்களுக்கு ரத்த மாதிரி எடுத்து பரிசோதனை செய்ததில் முழுமையாகக் குணமடைந்து தெரியவந்ததைத் தொடர்ந்து அவர்களை இன்று வீட்டிற்கு வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டு அவர்களுக்குப் பழங்கள் வழங்கி வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். தூத்துக்குடி மாவட்டத்தில் 160 பேர் கரோனா பாதிக்கப்பட்டு இதுவரை 53 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது மருத்துவமனையில்105 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2 பேர் தொற்றுக்கு உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.