வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் இருந்து கடலுக்குச் சென்று கரை திரும்பாததால் தேடப்பட்டு வந்த 4 மீனவர்களும் பாசிபட்டினம் கடற்கரையில் படகுடன் புதன்கிழமை(நவ.11) காலை கரை சேர்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கோடியக்காடு கிராமத்தைச் சேர்ந்த வீரப்பன் என்பவருக்கு சொந்தமான படகில் அதே ஊரைச் சேர்ந்த சற்குணம் (35), உத்திராபதி (20), அமிர்தலிங்கம் (60), காளிதாஸ் (40) ஆகியோர் கோடியக்கரை படகு துறையில் இருந்து திங்கள்கிழமை மீன் பிடிக்கச் சென்றனர்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே 5 பாகத்தில் வலை விரித்து மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அன்று இரவு வலையை திரும்பி எடுக்கும்பொழுது படகு விசிறியில் வலைகள் சிக்கிக் கொண்டதால் படகை இயக்க முடியாமல் பழுதானதால் தவித்துள்ளனர்.
அப்போது அந்த வழியே வந்த மற்ற மீனவர்கள் முயற்சி செய்தும் படகை நகர்த்த முடியவில்லை.
இதையடுத்து, அன்று இரவு கரை திரும்பிய சக மீனவர்கள் தெரிவித்த தகவலின் பேரில் ஊரில் இருந்து சில மீனவர்கள் சென்றனர்.
ஆனால், அந்த இடத்தில் இருந்த மீனவர்கள் நால்வருடன் படகும் மாயமானது தெரிய வந்தது.
பலத்தக் காற்றுடன் கடல் சீற்றமும் அதிகமாக இருப்பதால் படகு திசை மாறி சென்றிருக்கலாம் எனக் கருதப்பட்டது.
இது குறித்து மீனவ சங்கத்தினர் மீன் துறை அதிகாரிகளுக்கும், காவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். படகுடன் மாயமான மீனவர்களை சக மீனவர்கள் இரண்டு படகுகளில் தேடி வந்தனர்.
இந்த நிலையில், படகு எஞ்சின் பழுதானதால் காற்றின் திசையில் சென்ற படகுடன் ராமநாதபுரம் மாவட்டம்,பாசிபட்டினம் கடற்கரையில் மீனவர்கள் நால்வரும் பத்திரமாக புதன்கிழமை காலையில் கரை சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.