நவ. 18 அல்லது 19 ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும்: அமைச்சர் விஜயபாஸ்கர்
வருகிற 18 அல்லது 19 ஆம் தேதி மருத்துவக் கலந்தாய்வு தொடங்கும் என தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா காலத்தில் சுமார் 50 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் ரெஸ்பான்ஸ் நேரம் 8.01 நிமிடமாக உள்ளது. விரைவில் 108 ஆம்புலன்ஸ்க்கான ஆண்ட்ராய்டு செயலி வெளியிடப்படும. ஊபர், ஓலா செயலிகள் போல ஆம்புலன்ஸ் வாகனத்தையும் ஜிபிஎஸ் ட்ராக்கிங் மூலம் பொதுமக்கள் காண முடியும்.
தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வுக்கு 34,424 பேர் விண்ணப்பித்துள்ளனர். இன்று மாலை 5 மணி வரை மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.
மொத்தமாக 4,061 இடங்களுக்கு கவுன்சிலின் நடைபெற உள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் 304 பேருக்கு குறையாமல் கிடைக்கும். பிடிஎஸ் மாணவர்கள் 91 பேருக்கு கிடைக்கும். எனவே, 7.5% உள் இட ஒதுக்கீடு மூலமாக மொத்தமாக 395 பேருக்கு மருத்துவப்படிப்புக்கான இடம் கிடைக்கும்.
வருகிற 16 ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். 18 அல்லது 19 ஆம் தேதி கலந்தாய்வு நடைபெறும். அதிகாரபூர்வ மருத்துவ கலந்தாய்வு தேதி ஓரிரு நாளில் அறிவிக்கப்படும். கலந்தாய்வு நேரடியாகவே நடைபெறும். முறையான கரோனா விதிமுறைகளுடன் கலந்தாய்வு நடைபெறும் என்றார்.