சென்னை யானைகவுனியில் கணவர் மற்றும் மாமனார், மாமியாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மருமகளை காவல்துறையினர் புணேவில் கைது செய்தனர்.
கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மருமகள் ஜெயமாலா உள்பட மூன்று பேரை புணேவில் சுற்றுவளைத்து தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை யானைகவுனியில் வசித்து வந்த தலில்சந்த் (74), அவரது மனைவி புஷ்பா பாய் (70) மகன், சீத்தல் ஆகியோர் யானைகவுனியில் நேற்று (வியாழக்கிழமை) சுட்டுக்கொல்லப்பட்டனர்.
தகவல் அறிந்து விரைந்த காவல்துறையினர் மூவரது உடல்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் அவரது மருமகளே மூவரையும் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது.
சீத்தலிடம், விவாகரத்து பெற்று வாழ்ந்து வரும் ஜெயமாலா ஜீவனாம்சம் கேட்டு வழக்குத் தொடர்ந்திருப்பதாகவும், அது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே அவ்வப்போது மோதல் நிலவி வந்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே பேச்சுவார்த்தைகாக நேற்று முன் தினம் மகாராஷ்டிரத்திலிருந்து ஜெயமாலா தமது உறவினர்களுடன் சென்னைக்கு வருகை புரிந்துள்ளார்.
அப்போது கணவர் வீட்டாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தனிப்படை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மருமகள் ஜெயமாலா உள்பட மூன்று பேர் புணேவில் கைது செய்யப்பட்டனர்.