ஈரோடு: அமித்ஷா வருகை தமிழக பாஜக தொண்டர்களை ஊக்கப்படுத்தும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பிறகு அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
வெற்றிவேல் யாத்திரை கடந்த நவம்பர் 6 ஆம் தேதி திருத்தணியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கந்தசஷ்டிகவசம் பாடிய இடமான சென்னிமலை ஆண்டவர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு ஈரோட்டில் யாத்திரையை தொடங்குகிறோம். எங்களுடைய யாத்திரை டிசம்பர் 7 ஆம் தேதி திருச்செந்தூரில் முடிவடையும்.
இந்து கடவுள்களை அவமதிக்கும் திமுக, கருப்பர் கூட்டம் உள்ளிட்டோருக்கு தக்க பாடத்தை புகட்டுவதற்காக இந்த யாத்திரையை தொடங்கி இருக்கிறோம்.
கரோனோ களப்பணியாளர்களை கௌரவபடுத்துவதற்காகவும், மத்திய அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் எங்கள் திட்டம்.
மேலும் அமித்ஷா வருகை தமிழக பாஜக தொண்டர்களுக்கு ஆக்கத்தையும், ஊக்கத்தையும், நம்பிக்கையையும், தைரியத்தையும் அளிக்கும் என்றார்.