பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 649 கனஅடி உள்ள நிலையில் வாய்க்கால் பாசனத்துக்கு 2600 கனஅடியாக அதிகமாக தண்ணீர் திறந்துவிடப்படுவதால் தற்போது அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல குறைந்து 95.43 அடியாக ஆக சரிந்துள்ளது.
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமாக உள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 105 அடியாகவும், நீர் இருப்பு 32.80 டிஎம்சியாகவும் உள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்கால் மூலம் 1 லட்சத்துக்கு 43 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஆண்டு பருவமழை தொடர்ந்து பெய்ததால் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது. அதைத் தொடர்ந்து கடந்த ஆக.14 ஆம் தேதி முதல் கீழ்பவானி வாய்க்கால் பாசனத்துக்கு 2300 கனஅடி நீரும் மற்றும் காலிங்கராயன், தடப்பள்ளி பாசனத்துக்கு தண்ணீர் 1400 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்தது.
கடந்த சில நாள்களாக அணைக்கு நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகரிப்பு காரணமாக அணையின் நீர்மட்டம் மெல்ல மெல்ல சரிந்து 95.43 அடியாக சரிந்தது. நாளை நவ 28 ஆம் தேதியுடன் தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு தண்ணீர் திறப்பு முடிவடைகிறது. கீழ்பவானிவாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு டிச.30 வரை உள்ளதால் அணையின் நீர்மட்டம் மேலும் குறையும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.
அணையின் நீர் இருப்பு விபரம்: நீர்மட்டம் 95.43 அடி, நீர் வரத்து 649, நீர் வெளியேற்றம் 2600 கன அடி மற்றும் நீர் இருப்பு 25.30 டிஎம்சி ஆக உள்ளது.