துரோக வரலாற்றுக்கு விஜய் சேதுபதி துணை போகக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், இலங்கை மட்டைப்பந்து வீரர் முத்தையா முரளிதரனின் சாதனைகளை மையப்படுத்தி உருவாக்கப்படும் 800 என்ற தலைப்பிலான தமிழ்த் திரைப்படத்தில், முரளிதரனின் வேடத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கின்றன. அறியாமையால் ஒரு துரோக வரலாற்றுக்கு துணை போக விஜய் சேதுபதி முனைவது தவறு; அது திருத்தப்பட வேண்டும். விஜய் சேதுபதி தமிழ்த்திரையுலகின் சிறந்த நடிகர்களில் ஒருவர்.
மிகவும் கடினமான காட்சிகளைக் கூட எளிதாக நடித்து ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தவர். இப்படித் தான் நடிப்பேன் என்று வரையறை வகுத்துக் கொள்ளாமல் நடிப்புக்குத் தீனி போடும் அத்தனை பாத்திரங்களிலும் துணிந்து நடிப்பவர். அப்படிப்பட்டவர் 800 திரைப்படத்தில், முத்தையா முரளிதரன் எனும் கோடாரிக் காம்பின் முழுமையான துரோக வரலாற்றை அறிந்து கொண்டு தான் நடிக்கிறார் என்று நான் நம்பவில்லை; அறியாமை காரணமாகவே இப்படி ஒரு படத்தில் நடிக்க அவர் ஒப்புக்கொண்டிருப்பார் என்று நம்புகிறேன்.
ஒருவேளை முத்தையா முரளிதரனின் துரோகங்களையெல்லாம் நன்றாக அறிந்த பிறகே அவர் அப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருப்பார் என்றால் அவர் முரளிதரனை விட மோசமான துரோகியாக பார்க்கப்படுவார். 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக்கூடாது என்றெல்லாம் நான் வலியுறுத்தப்போவதில்லை. அந்தப் படத்தில் நடிக்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தால் இனமான வரலாற்றில் இடம் பெறுவார்; மாறாக, தமிழர்களின் எதிர்ப்பை மீறி இந்தப்படத்தில் நடித்தால் இழிதுரோக வரலாற்றில் இடம் பெறுவார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.