சென்னை: மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், மத்திய வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிசாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று திருவள்ளூர், தர்மபுரி, சேலம், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் பரவலாக காலை முதலே ஆங்காங்கே மழை பெய்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். இதன் காரணமாக தென்னிந்திய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.