சென்னை கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து, ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டுமென, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக கோயம்பேடு காய்கறி, பூ, பழம், மற்றும் உணவு தானிய வணிக வளாகத்தை 4 மாதங்களுக்கும் மேலாக முடக்கி வைத்திருந்தது. இதையடுத்து கோயம்பேடு சந்தையைத் திறப்பது தொடா்பாக வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகளுடன் துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அண்மையில் ஆலோசனை நடத்தினாா்.
அதனைத்தொடர்ந்து கோயம்பேடு உணவு தானிய வணிக வளாகத்தை செப்டம்பர் 18 ஆம் தேதியும், மொத்த காய்கறி வணிக வளாகத்தை செப்டம்பர் 28ஆம் தேதியும் திறப்பதாக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளிட்டுள்ளார். மேலும், பூ, பழம் மொத்த வணிக வளாகத்தையும், சில்லரை காய்கறி சிறு மொத்த வணிகத்தையும் அடுத்த கட்டமாக திறப்பதற்கு உறுதி அளித்துள்ளனர்.
இந்த நிலையில் கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியைத் திறக்க அனுமதிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், கோயம்பேடு 4ஆவது நுழைவுவாயில் மொத்த கனி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு, முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை நீதிபதிகள் முடித்துவைத்தனர்.