சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மேலும் குறைந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 27,077 கன அடியிலிருந்து 7,679 கன அடியாக சரிந்தது.
டெல்டா பாசன தேவைக்காக நொடிக்கு 20,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு நொடிக்கு 850 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 99.12 அடியாகவும், நீர் இருப்பு 63.70 டி.எம்.சி. யாகவும் உள்ளது.
நேற்று முன்தினம் 66 ஆவது ஆண்டாக 100 அடியை எட்டிய மேட்டூர் அணை நீர்மட்டம் நீர்வரத்து சரிவால் ஞாயிற்றுக்கிழமை 100 அடிக்கு கீழே சரிந்தது.
இதனிடையே தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து நொடிக்கு 15,000 கனஅடியில் இருந்து 8,000 கனஅடியாக சரிந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்துள்ளதால், கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.