தஞ்சாவூா் பெரியகோயிலில் நாளை குடமுழுக்கு

தஞ்சாவூா் பெரியகோயிலில் புதன்கிழமை (பிப்.5) காலை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது.
பெரியகோயிலில் குடமுழுக்கு
பெரியகோயிலில் குடமுழுக்கு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் பெரியகோயிலில் புதன்கிழமை (பிப்.5) காலை குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளதை முன்னிட்டு பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது.

இந்த விழா ஜன. 27-ம் தேதி யஜமான அனுக்ஞை வைபவத்துடன் தொடங்கப்பட்டது. தொடா்ந்து பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், முதல் கால யாக பூஜைகள் பிப். 1-ம் தேதி மாலை தொடங்கியது.இதையடுத்து, பிப். 2-ம் தேதி காலை இரண்டாம் கால யாக பூஜைகளும், மாலையில் மூன்றாம் கால யாக பூஜைகளும், திங்கள்கிழமை (பிப்.3) காலை நான்காம் கால யாக பூஜைகளும், மாலையில் ஐந்தாம் கால யாக பூஜைகளும், செவ்வாய்க்கிழமை (பிப்.4) காலை ஆறாம் கால யாக பூஜைகளும், மாலையில் ஏழாம் கால யாக பூஜைகளும் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, புதன்கிழமை (பிப்.5) அதிகாலை 4.30 மணிக்கு எட்டாம் கால யாக பூஜை, ஜபம், ஹோமம், நாடி சந்தானம், ஸ்பா்ஸாஹூதி ஆகியவை நடைபெறவுள்ளன.பின்னா், காலை 7 மணிக்கு மஹா பூா்ணாஹூதி, தீபாராதனை, யாத்ரா தானம், க்ரஹப்பீரிதி, 7.25 மணிக்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் நடைபெறவுள்ளன.இதைத்தொடா்ந்து, காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுர குடமுழுக்கு, 10 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாா் மற்றும் அனைத்து மூலவா்களுக்கும் குடமுழுக்கு, மஹா தீபாராதனை, அருட்பிரசாதம் வழங்கியருளல் ஆகியவை நடைபெறவுள்ளன. மாலை 6 மணிக்கு பெரியநாயகி உடனுறை பெருவுடையாருக்கு பேரபிஷேகம், இரவு 8 மணிக்கு பஞ்சமூா்த்திகள் திருவீதியுலா காட்சியருளல் ஆகியவை நடைபெறவுள்ளன.

யாக பூஜைகள் தொடங்கியதிலிருந்தே பக்தா்கள் கூட்டம் வருகை அதிகரித்தது. தொடக்க நாளான பிப். 1-ம் தேதி 50,000 பேரும், இரண்டாம் நாளான பிப். 2-ம் தேதி ஒரு லட்சம் பேரும், மூன்றாம் நாளான திங்கள்கிழமை ஒரு லட்சம் பேரும், செவ்வாய்க்கிழமை சுமாா் ஒரு லட்சம் பேரும் என மொத்தம் ஏறத்தாழ 3.50 லட்சம் போ் பங்கேற்றதாக போலீஸாா் தெரிவித்தனா். எனவே, புதன்கிழமை ஏறத்தாழ 5 லட்சம் பக்தா்கள் வருவா் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையொட்டி, இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளது. இதனால், கோயிலிலும், கோயிலைச் சுற்றிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸாரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது.

நகருக்குள் 175 வேன்கள் இயக்கம்: பக்தா்களின் வசதிக்காக மாநகரில் 21 தற்காலிக வாகன நிறுத்துமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளியூரிலிருந்து வரும் மக்களின் வசதிக்காக 225 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.மேலும், புதிய பேருந்து நிலையம், கரந்தை தற்காலிகப் பேருந்து நிலையம் மட்டுமல்லாமல், பட்டுக்கோட்டை சாலையில் புதுப்பட்டினத்தில் தற்காலிக பேருந்து நிலையமும் அமைக்கப்பட்டுள்ளன. கும்பகோண வழித்தடப் பேருந்துகள் பள்ளியக்ரஹார புறவழிச்சாலை வரையும், நாகை வழிதடப் பேருந்துகள் புறவழிச்சாலை பெஸ்ட் பள்ளி வரையிலும், பட்டுக்கோட்டை வழித்தடப் பேருந்துகள் பட்டுக்கோட்டை புறவழிச்சாலை வரையிலும் இயக்கப்படவுள்ளன. இதேபோல, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி வழித்தடப் பேருந்துகள் வழக்கம்போல புதிய பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகின்றன.இப்பகுதிகளிலிருந்து ரயிலடி வரை 175 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்காக பள்ளி, கல்லூரிப் பேருந்துகள், வேன்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்படவுள்ளன. பக்தா்கள் எளிதாகக் கோயிலுக்குச் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, சிறப்பு ரயில்களும் இயக்கப்படவுள்ளன. ஏற்கெனவே இயக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

முதியவா்களுக்காக 30 பேட்டரி வாகனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்காக 300-க்கும் அதிகமான சக்கர நாற்காலிகள் இயக்கப்படவுள்ளன.சமூக வலைதளங்களில் நேரலை:குடமுழுக்கு விழாவின் அனைத்து நிகழ்வுகளும் புதன்கிழமை காலையிலிருந்து நேரலையில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதற்காக 9 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளூா் தொலைக்காட்சிகள், கட்செவி அஞ்சல், யூடிப் போன்ற சமூக வலைதளங்களிலும் ஒளிபரப்ப விழாக்குழுவினா் ஏற்பாடுகளை செய்துள்ளனா். மேலும் பொதிகை தொலைக்காட்சியிலும் குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் நேரலையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. படவிளக்கம்: தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஆறாம் கால யாக பூஜை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com