அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட 7 வயது சிறுமியின் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இருவரை கைது செய்ய வலியுறுத்தி சிறுமியின் பெற்றோர்கள், உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சிறுமியை கொலை செய்த நபர்களை கைது செய்தபிறகே உடலை வாங்குவோம் என உறவினர்கள் முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். காவல்துறை உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் போரட்டத்தை கைவிட்டு சிறுமியின் உடலை பெற்றுக்கொண்டனர்.
மேலும், மாவட்ட ஆட்சித் தலைவர் உமா மஹேஸ்வரி சிறுமியின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதோடு, ரூ. 9.12 லட்சத்திற்கான காசோலையை சிறுமியின் பெற்றோர்களிடம் அளித்தார். அறந்தாங்கி சட்டப்பேரவை உறுப்பினர் இ.ஏ. ரத்தினசபாபதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெ.வே. அருண்ஷக்திகுமார், மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
முன்னதாக, முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை மாலை அறிவித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத் தீருதவி நிதியாக ரூ.4,12,500 வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.