தமிழகத்தில் இன்று புதிதாக 4,329 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டோர், பலியானோர் உள்ளிட்ட தகவல்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 4,329 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தில் மட்டும் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,264. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களில் உறுதி செய்யப்பட்டவர்கள் 65 பேர். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது. இன்றைய நிலவரப்படி, தமிழகத்தில் 1,02,721 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 2,082 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் பாதிப்பு 64,689 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 64 பேர்(அரசு மருத்துவமனை-42, தனியார் மருத்துவமனை-22) பலியானதாக இன்றைய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 1,385 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயம் இன்று மட்டும் 2,357 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 58,378 பேர் குணமடைந்துள்ளனர். இன்றைய தேதியில் 42,955 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 35,028 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 12,70,720 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் அரசு ஆய்வகங்கள் 48, தனியார் ஆய்வகங்கள் 43 என மொத்தம் 91 கரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளன.
தமிழகத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று ஒருநாள் பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.