ஊரடங்கு நீட்டிப்பா? - ஜூலை 30ல் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை
ஜூலை 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள்(ஜூலை 30) ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வருகிற ஜூலை 31 ஆம் தேதியுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடிவடைய உள்ளது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மருத்துவ நிபுணர் குழுவுடன் காணொலி வாயிலாக நாளை மறுநாள்(ஜூலை 30) ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார்.
நாளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ள நிலையில், அதற்கு மறுநாள் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி மூலமாக நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொள்வர். தற்போது தமிழகத்தில் மாவட்ட வாரியாக கரோனா பரவல் நிலை, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு ஊரடங்கு தளர்வுகள் குறித்து முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒவ்வொரு முறையும் மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்திய பின்னரே ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தமிழக அரசு முடிவெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.