சென்னையில் உள்ள ராயபுரம் மண்டலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,935 ஆக உள்ளது. துவக்கம் முதலே இந்த மண்டலத்தில் கரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 15,770 ஆக உள்ளது. இவர்களில் 8,136 பேர் குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். 128 பேர் கரோனா பாதித்து பலியாகியுள்ளனர். தற்போது மருத்துவமனையில் 7,387 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிகநகர், அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் ஆகிய ஆறு மண்டங்களில் தினந்தோறும் கரோனா பாதிப்பு அதிகரித்தே வருகிறது.
இந்த ஆறு மண்டலங்களில் ராயபுரத்தில் கரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை நெருங்ககிறது. இதற்கு அடுத்த இடத்தில் கோடம்பாக்கமும், தண்டையார்பேட்டையும் உள்ளன.
சென்னையில் மட்டும் திங்கள்கிழமை ஒரேநாளில் 967 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்களை தமிழக சுகாதாரத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டது. இதன்படி, தமிழகத்தில் புதிதாக 1,162 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 967 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் புதிதாக 48 பேருக்கும், திருவள்ளூரில் புதிதாக 33 பேருக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.