சேலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டத்துடன் ஈரடுக்கு மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் ஈரடுக்கு மேம்பாலம் மற்றும் ரயில்வே மேம்பாலம் ஆகியவற்றை திறந்து வைத்து தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளதன் மூலம் சேலம் மாநகர மக்களின் நீண்ட காலக் கோரிக்கை நிறைவேற்றி வைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த ஈரடுக்கு மேம்பாலம் திறக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல்வேறு பகுதிகளில் பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் ஈரடுக்கு பாலத்தக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயர் சூட்டப்படுகிறது. ஏவிஆர் ரவுண்டானா பாலத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படுகிறது என்றும் முதல்வர் தெரிவித்தார்.
சேலம் மாநகரில் கடுமையான போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்க 441 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதுடன், 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டடுக்கு மேம்பாலம் கட்டுவதற்கு, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 7.8 கிலோ மீட்டர் நீள தூரத்தில், தமிழகத்தில் இதுவரை எங்கும் இல்லாத தொழில்நுட்பங்களுடன் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 173 வலிமையான தூண்கள் அமைக்கப்பட்டு அதன்மீது ஒற்றை ஓடுதளம் 7 மீட்டர் அகலமும், இரட்டை ஓடுதளம் 13.6 மீட்டர் அகலமும் கொண்டாக அமைக்கப்பட்டுள்ளது. பாலத்திற்கு கீழ் இரண்டு புறமும் 7 மீட்டர் அகலம் கொண்ட சேவை சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்துரோடு மையப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் அதிநவீன சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.
கரோனா நோய் தாக்கம் காரணமாக இறுதி கட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் கட்டுமான பணிகள் தொடர அனுமதி அளிக்கப்பட்டது. அப்போது பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு, தற்போது முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார்.