சென்னை: தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வாழும் மக்களுக்கு, நிவாரணமாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதனை ஒட்டியிருக்கும் பகுதிகளில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சென்னை மற்றும் சென்னையின் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் ஜூன் 19-ம் தேதி முதல் 12 நாள்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்கலாம்.. சென்னையில் வரும் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிப்பு: தமிழக அரசு
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வாழும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு,
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளிலும்,
திருவள்ளூர் மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள், திருவள்ளூர் நகராட்சி, கும்மிடிபூண்டி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பேரூராட்சிகளிலும்
மற்றும் பூவிருந்தவல்லி, ஈக்காடு மற்றும் சோழவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,
செங்கல்பட்டு மாவட்டத்தில், பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள்,
செங்கல்பட்டு மற்றும் மறைமலைநகர் நகராட்சிகளிலும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி பேரூராட்சியிலும் மற்றும் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும்,
இதையும் படிக்கலாம்.. ஜூன் 21, 28-ம் தேதிகளில் எந்த தளர்வும் இன்றி முழு ஊரடங்கு: தமிழக அரசு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதேபோன்று, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக அரசு வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.